கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தென் பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் ஓசூர் கெலவரப்பள்ளி அணை,   கிருஷ்ணகிரி கேஆர்பி அணை மற்றும் திருவண்ணாமலை சாத்தனூர் அணைகளில் நீர் நிரம்புகிறது. மேலும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அருகில் ஒரு சிறிய அணைகட்டு  கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்டுதோறும் மூன்று முறை வெள்ளப்பெருக்கு ஏற்படும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த 3 மாதங்களாக மழையின்றி வறண்டு காணப்பட்டது.

 



 

தற்பொழுது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. கடந்த ஒரு வார காலமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறுகின்ற தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக வரண்டு கிடந்த தென்பெண்ணை ஆற்றில் தற்பொழுது தண்ணீர் வர தொடங்கியுள்ளது.

 



 

இந்நிலையில் தென் பெண்ணையாற்றின் குறுக்கே கே.ஈச்சம்பாடியில் கட்டப்பட்டுள்ள அணை கட்டு நிரம்பி தண்ணீர் ஆற்றில் வழிந்தோடுகிறது. தொடர்ந்து அணைக்கட்டின் மீது தண்ணீர் வழிந்தோடுவது பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் ஓசூர் கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், தென்பெண்ணையாற்றில் கூடுதலாக தண்ணீர் வர வாய்ப்புள்ளது. இந்த நீர்வரத்தால், நவலை, பெரமாண்டப்பட்டி, தொட்டம்பட்டி, எம்.வெளாம்பட்டி, கீழ்மொரப்பூர் உள்ளிட்ட  பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



 

மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 417 கன அடியாக இருந்து வருகிறது. இதனால் அணையின் கொள்ளளவான 52 அடி உயரத்தில் தற்போது 50 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் மழை தொடர்ந்தால், அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  இந்நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி, எந்த நேரத்திலும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.  இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள மக்கள் மற்றும் கால்நடைகளை ஆற்று பகுதிகளுக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றங்கரையோர பகுதிகளை பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



 

மேலும் தற்போது கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நிரம்பி வழியுவதால், மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கே.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து இடது மற்றும் வலது புற கால்வாய்கள்களில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தென்பெண்ணை ஆறு பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.