செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கடம்பூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மூன்று பேரின் உடல்களை கண்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீசார் அதில் பெரியவர் ஒருவரின் சடலத்தையும் இரண்டு குழந்தைகளின் சடலத்தையும் மீட்டனர். 



 

இதனை அடுத்து இறந்து போனவர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஞானவேல் (44). என்பதும், அவரது மகள்கள் ஐஸ்வர்யா (5). மற்றும் பூஜா (3). என்பதும் தெரியவந்தது.  கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஞானவேல் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி இடையே குடும்ப பிரச்னை ஏற்படுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கணவர் ஞானவேல் கோபித்துக் கொண்டு தனது இரு மகள்களையும் ஆட்டோவில் அழைத்து வந்து கடம்பூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



 

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குடும்ப பிரச்சினை காரணமாக மூவரும் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட பொழுது தந்தையை இரண்டு குழந்தைகளும் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 



 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .