திருவண்ணாமலை மாவட்டம் நகர காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சுந்தர். வயது (58). ஏற்கனவே திருமணமாகி மனைவி விவாகரத்து செய்துவிட்ட அவர், தனது இரு மகன்களுடன் திருவண்ணாமலை மத்தளாங்குளத்தெருவில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். திருவண்ணாமலை காஞ்சி சாலையில் வசித்து வரும் சுமதி வயது (55) என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பு உதவி ஆய்வாளர் சுந்தரின் மகன்களை பராமரிக்க வீட்டு வேலைக்கு வந்து பின்னர் சுந்தர் மற்றும் சுமதி இடையே தொடர்பு ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது.


சுமதிக்கு நிறைய பணம் மற்றும் பொருட்கள் கொடுத்துவந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உதவி ஆய்வாளர் சுந்தருக்கும் காதலி சுமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இதுகுறித்து சுமதி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்து அனுப்பியுள்ளனர். சுமதிக்கு உதவி ஆய்வாளர் சுந்தர் பணம், நகை உள்ளிட்டவற்றைக் கொடுத்து கள்ள உறவை துண்டித்துள்ளார்.



இந்நிலையில் சுந்தருக்கு மற்றொரு பெண்ணான லட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு தற்போது கணவனை இழந்த லட்சுமி உதவி ஆய்வாளர் வீட்டிலேயே தங்கியுள்ளார். உதவி ஆய்வாளர் சுந்தருடன் ஏற்கனவே தொடர்பில் இருந்த சுமதியின் பெயரில், ஏற்கெனவே மாருதி 800 கார் வாங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அந்த காரினை புதிய காதலியான லட்சுமி பெயருக்கு பெயர் மாற்றம் செய்ததுடன் வீடு இடம் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பழைய காதலி சுமதி நேற்று இரவு சுந்தரின் மகன்கள் வீட்டில் இல்லாத நிலையில் இரவு 12 மணியளவில் சுந்தரின் வீட்டருகே தனது இருசக்கர வாகனத்தில் வந்து, தான் வாங்கி வந்த பெட்ரோலை உதவி ஆய்வாளரின் கார், பைக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.


இந்த தீ மளமளவென சுந்தரின் கார் மற்றும் பைக் மற்றும் அவரது படுக்கையறை, முதல் மாடி, மேல் மாடி என பல்வேறு இடங்களில் பரவியுள்ளது.படுக்கையில் இருந்த திடுக்கிட்டு எழுந்த உதவி ஆய்வாளர் சுந்தர் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அனைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.



மேலும் இந்த தீயால் கார் பைக் மற்றும் வீட்டின் பல்வேறு இடங்கள் சேதமடைந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சுந்தர் வீட்டில் அருகில் இருந்த வீட்டின் சிசிடிவி கேமராவில் பழைய காதலி சுமதி பெட்ரோல் ஊற்றி கொளுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் சுந்தர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் பழைய காதலி சுமதியை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக உதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.