காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தெற்கு ராஜகோபுரத்தின் மீது கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று இடி விழுந்ததில் நாசி தலைப்பகுதி சிதிலமடைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி பாலாலயம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக திருக்கோவில் தெற்கு ராஜகோபுரம் சிதிலமடைந்த பகுதிகள் புதுப்பிக்கப்பட்டு இன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது.
கோபுர குடமுழுக்கையொட்டி யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை கும்பகோணம் கே.தினகர் சர்மா தலைமையில் தொடங்கின. அன்றைய தினம் கோ பூஜை யாகசாலை மண்டப பூஜை மூலமந்திர ஜப ஹோமம் ஆகியன நடைபெற்றன. திங்கட்கிழமை மகா பூர்ணாஹூதி நடைபெற்று புனிதநீர் குடங்கள் கோவிலின் தெற்கு ராஜகோபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த குடமுழுக்கு விழாவில் திருக்கோவில் ஸ்ரீ காரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி மேலாளர் என் சுந்தரேசன் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் ஜெயராமன், கோயில் நிர்வாக அலுவலர் தியாகராஜன், திருக்கோவில் செயல் அலுவலர்கள் குமரன், வெள்ளைச்சாமி ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
காஞ்சி காமாட்சி வரலாறு
காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது. முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான்.
காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.