Ford | ஃபோர்டு தொழிற்சாலை முடிவு: நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினர் இன்று பேச்சுவார்த்தை...!

மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலை மூடப்பட போவதாக அறிவித்துள்ள நிலையில், இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது

Continues below advertisement
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் நீண்ட நாட்களாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. சென்னையில் மறைமலை நகர் மற்றும் குஜராத்தின் சனந்த் பகுதிகளில் அந்நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்தியாவில் உள்ள இரு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 
 
மறைமலைநகர் தொழிற்சாலை
 
தற்போது,  சென்னை அடுத்துள்ள மறைமலை நகரில் இருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேறுவதால், நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் சுமார் 19 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையில், நிரந்தர பணியாளர்களாக 2650 நபர்கள் பணியாற்றி வருகிறார்கள். 400-க்கும் மேற்பட்ட பயிற்சி தொழிலாளர்களும், 700 நிர்வாகப் பணியாளர்களும், அதேபோல் நேரடி ஒப்பந்த பணியாளர்களை இரண்டாயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 
இதுமட்டுமின்றி அந்த நிறுவனத்திற்கு உணவு, டீ, அடிப்படை வசதிகள் , ஓட்டுனர்கள் உள்ளிட்ட பணி செய்து தரும் மறைமுக பணியாளர்கள் 2500-க்கும் மேற்பட்ட நபர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் மூலம் சுமார் 7 ஆயிரம் பணியாளர்களின் நேரடியாக பயன்பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சுமார் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் நிறுவனத்திற்கு மட்டும் பிரத்யேகமாக உதிரி பாகங்கள் தயாரிக்கும் மறைமுக ஊழியர்களாக, சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது இந்நிறுவனம் மூடப்படும் என்பதால் மறைமுக பணியாளர்களாக பணிபுரிந்து வரும், 12000 நபர்களுக்கான வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.  மொத்தம் சுமார் 19 ஆயிரம் பணியாளர்கள் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
 
இன்று பேச்சுவார்த்தை
 
தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுடன் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், நிறுவனத்தை விற்கும் பட்சத்தில் எங்களுடைய வேலையை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்க இருப்பதாக தெரிவித்தனர். மேலும் ஊழியர்களின் எதிர்காலம் குறித்து தொழிற்சாலை நிர்வாகம் முழு விவரத்தை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Continues below advertisement
Sponsored Links by Taboola