காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் அத்தி வரதர் வைபவம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை மிக விமர்சியாக நடைபெற்றது. அத்திவரதர் வைபவத்தின் பொழுது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த, ஆதி அத்தி வரதர் சிலையை தரிசிப்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவு பொதுமக்கள் அத்தி வரதர் தரிசனம் செய்தனர்.



40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதுவும் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும், இந்த அத்தி வரதர் வைபவத்தை காண்பதற்கு பொது மக்களிடம் அதிக அளவு ஆர்வம் இருந்த காரணத்தினால், நாள் ஒன்றுக்கு வரதராஜ பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த அத்தி வரதரை தரிசிப்பதற்கு 2 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பொதுமக்கள் கூடினர். அரசு அறிவிப்பின்படி 48 நாட்களில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த அத்தி வரதரை தரிசிப்பதற்கு ஒரு கோடி நபர்களுக்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிந்த தெரிவிக்கப்பட்டிருந்தது.

                                                     

அவ்வாறு ஒரே நாளில் அதிக அளவு பொதுமக்கள் அத்தி வரதர் தரிசிக்க கூடியதால்  48 நாட்களும் கோயிலை சுற்றி பல்வேறு பகுதிகளில் கூட்டநெரிசலாக காஞ்சிபுரம் காட்சியளித்தது, கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போடப்பட்டிருந்த நடைமேடை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பொது மக்கள் கூட்டத்தால் சேதமடைந்தன. சேதமடைந்த நடைமேடை உள்ளிட்ட பகுதிகளை அத்திவரதர் வைபவத்திற்கு பிறகு சரி செய்யப்படும் என பொது மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அத்தி வரதர் வைபவம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை இடிந்து விழுந்த நடைமேடைகள் இதுவரை சரி செய்யப்படாமலேயே உள்ளன.



 

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து அத்தி வரதர் வைபவம் இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு முன்பை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.



 

உலகப் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் இடிந்து விழுந்த நடைமேடை இரண்டு ஆண்டுகளாக சரி செய்யாமல் இருப்பது பக்தர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. புராதன கோவிலாக உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இடிந்த பகுதிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.