சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டியது.


சென்னையில் மழை:


சென்னையில் நேற்றைய பகல் பொழுதில் வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில், நகரின்  பல்வேறு பகுதிகளிலும் அதிகாலையில் தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டியது. குறிப்பாக கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பதிவானது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில், மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேநேரம், பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இரவு நேரத்தில் பெய்த இந்த மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளதது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் மிதமான மழை பதிவானது.






மழைக்கு வாய்ப்பு:


தமிழகத்தில் 7 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் eஎற்கனவே தெரிவித்து இருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டு இருந்தது.