கொரோனா பரவல் தொடங்கிய 2020 மார்ச் மாதம் முதல், அப்போதும் இப்போதுமாய் முழு ஊரடங்கு, தளர்வுகளோடு ஊரடங்கு என தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால் சென்னை மாவட்டத்தில் பெரும்பாலும்  தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.


2021 மே மாத தொடக்கத்தில், சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 7000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 2,000-க்கும் குறைவான எண்ணிக்கையில் பாதிப்பு பதிவாகி வருவதால், இம்முறை சென்னை மாவட்டத்திற்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது.



பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் ககன்தீப் சிங் பேடியின் தலைமையிலான தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால், சென்னையில் கொரோனா பாதிப்பு விகிதம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அவர் பொறுப்பேற்ற சில நாட்களில், சென்னை மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக இடம் கிடைக்காமலும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடும் நிலவி வந்தது. கிட்டத்தட்ட 80 லட்சம் மக்கள் இருக்கும் சென்னை மாநகராட்சி பகுதிகளில், நோய்த்தொற்று பாதித்த அத்தனை பேருக்கும் 100% சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த முடியாது என்பதை கணித்த ககன்தீப் சிங் பேடி, REVISED MICRO PLAN FOR COVID MANAGEMENT திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.






கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதைவிட, நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கும்போதே அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபடுவதைதான் REVISED MICRO PLAN FOR COVID MANAGEMENT  என குறிப்பிடுகிறார் அவர். சென்னை மாநகர் முழுவதும் தீவிர பரிசோதனை மேற்கொள்வதுதான் இத்திட்டத்தின் முதல் ‘FOCUS


இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னை மாநகரில்தான் வீட்டுக்கு வீடு சென்று காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ‘DOOR TO DOOR FEVER SURVEY’ மற்றும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் மூலம் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பவர்களை முன்கூட்டியே கண்டறிந்து தனிமைப்படுத்துகின்றனர். இதனால், இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் ஆகியோருக்கு கொரோனா பரவாமல் இருப்பதை ஓரளவிற்கு தடுக்க முடிகின்றது.


இரண்டாவது, அனைவருக்கும், தடுப்பூசி போடும் திட்டம்.


கொரோனா பரவலில் இருந்த தப்ப, தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிக அவசியம். இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னை மாநகரில் உள்ள சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். முக்கியமாக, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என ககன்தீப் சிங் எடுத்த அடுத்த அதிரடிதான் “வீட்டுக்கே சென்று தடுப்பூசி” செலுத்தும் திட்டம்.






சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக, சிறப்பு வசதிகள் அமைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக உதவி எண் மூலம், தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வருபவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 3500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.


REVISED MICRO PLAN FOR COVID MANAGEMENT-ஆல் விளைந்த பயன், சென்னையில் கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது.  பொறுப்பேற்ற ஒரு மாதத்திலேயே தான் ஒரு “பேரிடர் மேலாண்மை நிபுணர்” என்பதை கண்முன்னே நிரூபித்து வருகிறார் ககன் தீப் சிங் பேடி.



களத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகளையும் தாண்டி, சமூக வலைதளத்தையும் தடுப்பு பணிக்காக ககன் தீப் சிங் பயன்படுத்தி வருகிறார். பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும், உதவிகளுக்கும் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். களமோ, சமூக வலைதளமோ தடுப்பு நடவடிக்கைகளில் வேகம் குறைந்துவிட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றார் ககன் தீப் சிங் பேடி.


25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரிடர் மேலான்மையில் நிபுணத்துவம் பெற்ற ககன்தீப் சிங் பேடி, இந்த கொரோனா பேரலை சென்னையை நெருங்க விடாதிருக்க தடுப்பு சுவர்களை எழுப்பி வருகிறார். ஒரு கையில் கொரோனா தடுப்பு, மறு கையில் சென்னை மாநகரை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தையும் இப்போது கையில் எடுத்திருக்கிறார் ககன் தீப்.


கொரோனா அற்ற மாநகராக சிங்கார சென்னை 2.0-வை கட்டி எழுப்ப வாழ்த்துகள்!