தொடர் விடுமுறை:


நவராத்திரி மற்றும் விஜயதசமியை ஒட்டி வரும் செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால், அடுத்த 4 நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க திட்டமிட்டுள்ளனர். 


நிரம்பி வழியும் பேருந்து நிலையங்கள்:


கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து மாலை முதல் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் நிரம்பி வழிகின்றன. சொந்த ஊர்கள், ஆன்மீக தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயணிகளால் கோயம்ப்பேடு பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது. பலர் குடும்பத்துடன் பயணம் செய்வதையும் காண முடிந்தது. அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி பல தனியார் பேருந்துகளிலும் பொதுமக்கள் பயணம் செய்தனர்.




ஆம்னி பேருந்து


தனியார் பேருந்துகளில் சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில், 1280 பேருந்துகளில் 51 ஆயிரத்து 200 பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளனர். இதேபோன்று இன்று 1620 பேருந்துகளில் 65 ஆயிரம் பேர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளனர் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னை புறநகரில் கடும் போக்குவரத்து நெரிசல்


தொடர் விடுமுறை காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் ஜி.எஸ். டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதேபோன்று குரோம்பேட்டை பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் போக்குவரத்தின் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பெருங்களத்தூர் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.




கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்


புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது. தற்பொழுது  மழைநீர் வெளியேறுவதற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் இருபுறங்களும் கல்வெட்டுகள் புதைக்கும் பணி நடைபெற்று வருவதால்,  போக்குவரத்தில் அப்பகுதியில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதன் காரணமாக கிளாம்பாக்கம் பகுதியில், தற்போது கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது


தற்காலிக பேருந்து நிலையங்கள்:


சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் செல்ல வாய்ப்புள்ளதால், கூட்ட நெரிசலை தவிர்க்க  தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து,  திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்.


போளூர், சேத்பட்டு. வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.



பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகர போக்குவரத்து கழக பூவிருந்தவல்லி பணிமனை அருகில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு. திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.