பிளஸ் 1, ஐடிஐ  பயிலும்  6 லட்சத்து 18 ஆயிரத்து 101 மாணவர்களுக்கு அடுத்த 3 மாதத்துக்குள் இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


''2021- 2022 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ பகுதியாக நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ 11-ம்‌ வகுப்பு பயிலும்‌ அனைத்து வகுப்பைச்‌ சார்ந்த மாணவ / மாணவியர்கள்‌, வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறையின்‌ கீழ்‌ தொழிற்பயிற்சி (ஐடிஐ) பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ ஆகியோருக்கான 6,18,101 மிதிவண்டிகள்‌ கொள்முதல்‌ செய்ய 03.03.2022 அன்று ஒப்பந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது. 




ஒப்பந்தத்தில்‌ தகுதியான மிதிவண்டிகள்‌ உற்பத்தியாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌. ஒப்பந்தத்தில்‌ கலந்து கொண்ட தகுதியான நிறுவனங்களின்‌ விலைப்‌ புள்ளிகள்‌ திறக்கப்பட்டு, கொள்முதல்‌ குழு மூலம்‌ விலைக் குறைப்பு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. 


கொள்முதல்‌ குழுவால்‌ விலை குறித்து முடிவு எடுக்கப்பட்டு விரைவில்‌ 6,18,101 மிதிவண்டிகள்‌ கொள்முதல்‌ செய்து 3 மாத காலத்திற்குள்‌ மாணவ / மாணவியர்க்கு வழங்கப்படும்‌.''


இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவிகள் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001- 2002ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.


பின்பு, 2005- 2006ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. 


பட்ஜெட்டில் ரூ.162 கோடி ஒதுக்கீடு


2022- 23ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 17ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகபட்சமாக 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 


குறிப்பாக இல்லம் தேடிக் கல்வித் திட்டம் 200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் மீண்டும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், 15 மாவட்டங்களில் மாதிரிப்பள்ளிகள், மாவட்ட மத்திய நூலகங்கள் உள்ளிட்ட திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட் அறிவிப்பில், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குவதற்காக 162 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண