சென்னை : விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக மேலும் 4 போலீசார் எஸ். சி, எஸ். டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை காவலர் குமார், ஊர்காவல்படை வீரர் தீபக் மற்றும் 2 ஆயுதப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


முன்னதாக, சென்னை தலைமை செயலக குடியிருப்பு காவல்துறையினர்  புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் 2 நபர்கள் வந்தனர். அவர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். மேலும், அவர்கள் இருவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளனர். அவர்களை பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கத்தியை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ், 28, மற்றும் பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், 28 என்று தெரியவந்தது.






இந்த நிலையில், விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாகவும், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.


இதனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறினர். இதுதொடர்பாக, எழும்பூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.


இதற்கிடையே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விசாரணைக் கைதி விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  விக்னேஷ் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "விசாரணைக்கைதி விக்னேஷுக்கு வலிப்பு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பை சந்தேக மரணமாக பதிவு செய்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது. மாஜிஸ்திரேட் முன்பு விக்னேஷின் உடல்கூராய்வு நடைபெற்றது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காவல் மரணங்கள் எப்போது நிகழ்ந்தாலும் அது முறையாக விசாரிக்கப்பட்டு, உரிய நீதி வழங்கப்படும் என்ற நிலைப்பாட்டில் திமுக அரசு உறுதியாக உள்ளது" என்றார்.


ஏற்கனவே இந்த வழக்கில் இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண