ஊரில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தால், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என பலரும் அதன் மூலம் ஏதாவது ஒரு வகையில் பயன் பெறுவார்கள். சில நேரங்களில் அந்த மரங்களில் ஊறு விளைவிக்கும் பாம்புகளும் தஞ்சம் அடைவது உண்டு. அதேபோல தொழிற்சாலைகளால் பொதுமக்கள் ,பொருளாதாரம், உள்ளிட்ட நன்மைகள் நடந்தாலும் அதனை சுற்றி பெரிய தாதாக்கள், குட்டி தாதாக்கள், அடிமட்ட  ரவுடிகள், லெட்டர் பேட் அமைப்புகள் என ஏராளமானோர் வளர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

 

தொழில்சாலை நகரம்

 

தொழில் நகரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் அட்டகாசம் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் பெருகி வருகிறது. கடந்த சில மாதங்களாக ரவுடிகள் மாதம்தோறும் தங்களுக்கு ,இவ்வளவு கட்டிக்கொடுக்க வேண்டும் என தங்கள் ஆதரவாளர்கள் மூலம் மிரட்டி பல தொழில் நிறுவனங்களை வேலைசெய்யவிடாமல் தடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

 



இந்நிலையில் சென்னை புறநகர் மாவட்டங்களாக உள்ளாகும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ரவுடிகளை ஒதுக்குவதற்கு சிறப்பு தனிப்படைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் ரவுடி மற்றும் கட்டபஞ்சாயத்து வேலையில் ஈடுபடும் படப்பை குணா என்பவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். படப்பை குணாவின் ஆதரவாளர்களை ஒடுக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.

 



கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த படப்பை குணா திடீரென தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனை அடுத்து அவருடைய ஆதரவாளர்களை கைது செய்யும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர். படப்பை குணாவிற்கு வலது கரமாக செயல்பட்டு வந்த போந்தூர் சிவா என்பவரை  காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே வழக்கில் போந்தூர் சேட்டு என்பவரையும் தற்போது தேடி வருகின்றனர்.
  

 

பாஜகவில் இணைகிறாரா?

 

படைப்பை குணாவின் சாம்ராஜ்ஜியத்தை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைதுசெய்து வரும் நிலையில் , தற்போது ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வரும், குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் படப்பை குணாவின் இல்லத்தில் சந்தித்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.



செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூரியா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தபோது பெரும் பேசுபொருள் ஆனது. அதேபோல் படைப்பை குணாவை போலீசார் சுற்றி வளைத்து இருக்கும் நிலையில், அவருடைய மனைவி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளிடம் தொடர்புகொண்டு விசாரித்தபோது முறையாக பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.