காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் தொழிலாளர்கள் தங்குவதற்கு சுமார் 18,720 படுக்கை வசதி கொண்ட பிரம்மாண்ட விடுதி செயல்பாட்டிற்கு வரவுள்ளது 





சிப்காட் தொழில் பூங்கா


தமிழ்நாடு அரசு சார்பில்  தமிழ்நாடு முழுவதும்   16 இடங்களில் சிப்காட் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறு, குறு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ள. அந்த வகையில் சென்னை அருகே உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொழிற்சாலை அமைப்பதற்கு ஏற்ற இடமாக இருப்பதால் ஐந்து சிப்காட் தொழில் பூங்காக்கள் இயங்கி வருகின்றன ‌. 






முக்கிய பங்களிக்கும் ஸ்ரீபெரும்புதூர்


இங்குள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் , இருங்காடுக்கோட்டை ஸ்ரீபெரும்புதூர்  , பிள்ளைப்பாக்கம், வல்லம் மற்றும் ஒரகடம் ஆகிய ஐந்து சிப்காட் இயக்கி வருகின்றன. இங்கு கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 







இங்குள்ள சிப்காட் வளாகத்தில் மென்பொருள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கண்ணாடி தொழிற்சாலைகள் , பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மோட்டர் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் , பல வகையான தொழிற்சாலைகள் அமைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்திருப்பதால் ஏராளமான இளைஞர்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை இந்த நிறுவனங்கள் அளிக்கின்றனர். 





தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதி


இங்குள்ள தொழிற்சாலைகளை நம்பி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு பணி புரியும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களுக்கான அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 






அதன் ஒரு பகுதியாக சிப்காட் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகத்துடன் இணைந்து சிறப்பு திட்டத்தை உருவாக்கியது. இதன் மூலம் தொழில்துறை தொழிலாளர்களுக்கு மலிவு மற்றும் நியாய விலையில் விடுதிகள் கட்டப்பட உள்ளன. 


பிரத்தேக விடுதி வசதி..


அதன் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூர் வல்லம் - வடக்கல் பகுதியில் சுமார் 706.50 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 18,720 படுக்கைகள் கொண்ட தொழில்துறை வீட்டு வசதியும் சிப்காட் மூலம் நேரடியாக உருவாக்கி உள்ளது. இந்த திட்டத்திற்கு இந்திய அரசு மானியமாக ரூபாய் 37.44 கோடி ரூபாயும் , பாரத் ஸ்டேட் வங்கியின் ரூபாய் 498 கோடி ரூபாய் கடன் உதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்படும் தொழிலாளர்கள் மிகவும் பயனடைய உள்ளனர் . குறிப்பாக பாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்காக இந்த விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 






சிறப்பம்சங்கள் என்ன ?


சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கட்டிடங்கள் அமைந்துள்ளன.  இதில் 18, 720 அரைகள் படுக்கை அறைகளாக அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 13 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு தொகுதியில் 10  மாடியும்,  சுமார் 240 அறைகளும் , ஒரு அறையில் ஆறு படுத்தி வசதிகளும் என 1440 நபர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ‌. 







மைதான வசதிகள், வெளிப்புற விளையாட்டு பகுதிகள், தீ எச்சரிக்கை அலாரம், பசுமையான இயற்கை வளாகம், உள் சாலைகள், மழைநீர் வடிகால் வசதிகள், மழைநீர் சேமிப்பு , திடக்கழிவு மேலாண்மை, மாடியில் சூரிய மின் நிலையம் , தேவையான குடிநீர் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்த வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன ‌.


இந்தியாவில் முதல் முறை..


முன்னதாக இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது : இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் சார்பில் ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள வல்லம் படுகால் பகுதியில் ரூ.706 கோடியில் பாக்ஸ்கான் நிறுவனத்திற்காக 18,720 படுக்கைகள் கொண்ட தொழிற்சாலை பணியாளர்கள் தங்குவதற்கான கட்டிடத்தை வரும் 17ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் தெரிவித்துள்ளார்.