ஆஸ்திரேலியா நாட்டில் மகள் வீட்டில் இருந்து, மலேசியா வழியாக விமானத்தில், திரும்பிய சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த 58 வயது பெண், விமானம் வானில் பறந்தபோது, தூக்கத்திலேயே கடுமையான மாரடைப்பால் உயிரிழந்தார்.


சென்னை (Chennai News): சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கலையரசி (58). இவருடைய மகள் ஆஸ்திரேலியா நாட்டில் வசிக்கிறார். இதை அடுத்து கலையரசி இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று, அங்கு தங்கியிருந்தார்.


அதன்பின்பு கலையரசி ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இந்தியாவுக்கு திரும்புவதற்காக, மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், ஆஸ்திரேலியாவில் இருந்து கோலாலம்பூர் வந்து, அங்கிருந்து மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம், சென்னைக்கு நேற்று இரவு வந்து கொண்டு இருந்தார்.


" எந்த பதிலும் இல்லை "


அந்த மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 11.10 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கத் தொடங்கினார். ஆனால் கலையரசி மட்டும், விமானத்தின் இருக்கையில் தலையை சாய்த்து கொண்டு, தூங்குவது போல் இருந்தார். இதை அடுத்து விமான பணிப்பெண்கள், சென்னை வந்துவிட்டது இறங்குங்கள் என்று கூறி, கலையரசியை எழுப்பினர். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, தலை சாய்ந்து விழுந்தது. இதை அடுத்து பணிப்பெண்கள், விமான கேப்டனுக்கு தகவல் தெரிவித்தனர். 


" மாரடைப்பு காரணமாக "


உடனடியாக சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் அவசரமாக விமானத்துக்குள் ஏறி, கலையரசியை பரிசோதித்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே கலையரசி, உயிர் இழந்து உள்ளது தெரிய வந்தது. மேலும் கடுமையான மாரடைப்பு காரணமாக, தூக்கத்திலேயே கலையரசி உயிர் பிரிந்துள்ளது என்று தெரிவித்தனர். 


இதை அடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, கலையரசியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். 


ஒரு மணி நேரம் தாமதமாக


இதற்கிடையே இந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், வழக்கமாக இரவு 11 மணிக்கு சென்னை வந்துவிட்டு, மீண்டும் நள்ளிரவு 12 மணிக்கு, சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும். ஆனால் பயணி ஒருவர் விமானத்துக்குள் உயிர் இழந்து விட்டதால், விமானம் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக, அதிகாலை ஒரு மணிக்கு சென்னையில் இருந்து, கோலாலம்பூருக்கு, 267 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.