காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில்   கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து தட்டச்சு பணியாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இதே வளாகத்தில் ஹோமியோபதி மருத்துவ பிரிவு உள்ளது. ஹோமியோபதி மருத்துவ பிரிவில் மருத்துவர் முத்துகிருஷ்ணன் என்பவர் உதவி மருத்துவ அலுவலராக பணிபுரிகின்றார். முத்துகிருஷ்ணன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட சித்த மருத்துவ அலுவலரிடம்  புகார் அளித்துள்ளார்.

 



இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகார் மனுவில்,  கடந்த பதினெட்டாம் தேதி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அய்யாசாமி அலுவலகம் வரவில்லை. 50 சதவீத ஊழியர்கள் மட்டும்தான் பணிக்கு வரவேண்டுமென கூறி இருந்தபடியால் முதல் தளத்தில் ஊழியர் முத்து,பாதிக்கப்பட்ட பெண் ஆகியவர்கள் மட்டும்தான் பணிக்கு வந்திருந்தனர். ஊழியர் முத்து கருவூலத்துறை வரை சென்றிருந்தார். அன்றைய தினம் மதியம் அலுவலகத்தில் யாரும் இல்லாதபோது ஹோமியோபதி மருத்துவர் முத்துகிருஷ்ணன் முதல் தளத்தில் (மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அறை அருகே) டைப்பிங் செய்து கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சென்று தபால் கொடுக்க வந்துள்ளேன் எனக் கூறி உள்ளார். பின்னர் மாவட்ட அலுவலர் அறைக்கு அழைத்துள்ளார்.  மாவட்ட அலுவலர் அன்றைக்கு வராததால் மாவட்ட அலுவலக அறைக்கு என்னை ஏன் அழைக்கின்றீர்கள் என பாதிக்கப்பட்ட பெண் கேட்டுக் கொண்டிருந்த போதே மருத்துவர் முத்துகிருஷ்ணன் திடீரென தன்னை பின்புறமாக சென்று கட்டியணைத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் தெரிவித்துள்ளார். 



அவர் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு முதல் தளத்தின் வராண்டாவில் அழுது கொண்டே வந்து நின்றுள்ளார். எதேச்சையாக சித்த மருத்துவர் ராஜலக்ஷ்மி முதல் தளத்துக்கு வருவதை கண்ட ஹோமியோபதி மருத்துவர் முத்துகிருஷ்ணன் கீழே இறங்கி சென்று விட்டார். சித்த மருத்துவர் ராஜலட்சுமி பைக்கில் வீட்டுக்கு கிளம்பியதை உறுதி செய்து கொண்ட மருத்துவர் முத்துகிருஷ்ணன் மீண்டும் முதல் தளத்துக்கு சென்று பாலியல் தொந்தரவு அளிக்க முயற்சித்துள்ளார்.



 

வளாகத்தில் யாரும் இல்லாததால் மருத்துவர் முத்துகிருஷ்ணனிடம் தன்னை விட்டுவிடும்படி  மன்றாடி கேட்டும் மருத்துவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சுதாரித்துக்கொண்டு  தன்னுடைய கணவருக்கு போன் செய்து அலுவலகத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். தன் கணவனிடம் அப்போது கூறினால் பிரச்சினை பெரிதாகும் என்ற பயத்தினால் தன்னுடைய அலுவலக பணிகளை முடித்து கொண்டு வீட்டிற்கு சென்ற பிறகு நடந்ததை தன்னுடைய கணவனிடம்  பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.



 

ஏற்கனவே ஹோமியோபதி மருத்துவர் முத்துகிருஷ்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  இதேபோல் பாலியல் சீண்டல் செய்துள்ளார். வெளியே கூறினால் பிரச்சினை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.எங்கே தனக்கு அரசாங்க வேலை போய் விடுமோ என்ற பயத்தில் வெளியே கூறாமல் இருந்ததாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.பின்னர் ஹோமியோபதி மருத்துவர் முத்துகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஐயப்பன் , இந்திய மருத்துவர் சங்கம் ஹோமியோபதி துறை மற்றும் அரசு ஊழியர் சங்கம் ஆகியோர்களிடம் புகார் மனு அளித்து உள்ளார். 

 

இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலரிடம் ஏபிபி நாடு சார்பில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ‛‛பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் இருந்து தற்போது புகார் மனு பெறப்பட்டு உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு  மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் புகாரின் அடிப்படையில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,’’ எனவும் தெரிவித்தார்.