தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு முதல் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது. கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பில் சென்னையை காட்டிலும் கோவை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதால், பிற நோயாளிகளால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைகளுக்கும், சிகிச்சைக்கும் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், அரசு விதித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதிலும், மருத்துவர்களிடமும் ஆலோசனை பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டது. 


இதையடுத்து, அவர்களின் சிரமங்களை போக்குவதற்காக சென்னை மாநகராட்சி காணொலி காட்சி மூலமாக மருத்துவர்களின் ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில், இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் சாதாரண சிகிச்சைகளுக்காக மருத்துவரையோ அல்லது மருத்துவமனைகளுக்கோ செல்வதற்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் டெலிமெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க ஜி.சி.சி. வித்மேட் என்ற செயலி உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.




இந்த செயலியின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சையும், ஆலோசனைகளும் அதற்குரிய மருத்துவர்களிடம் காணொலி மூலம் 24 மணி நேரமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில், கொரோனா தொடர்பான அறிகுறிகள் உள்ள நபர்கள் இந்த செயலி மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும்போது சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளை மருத்துவர் கேட்டறிந்து அவருக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவருகிறார். கோவிட் தொற்று பாதித்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கும் ஜி.சி.சி. வித்மேட் செயலியின் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.




மேலும், பொதுமக்களுக்கு காணொலி காட்சி வாயிலாக மருத்துவ ஆலோசனைகளை வழங்க கூடுதலாக 94983 46510/ 94983 46511/ 94983 46512/ 94983 46513/ 94983 46514 என்ற வாட்ஸ்அப் தொலைபேசி எண்களம் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் முதல் 7.6.21 வரை இந்த செயலியின் மூலம் 1,702 நபர்களும், வாட்ஸ் அப் எண்களின் மூலம் 991 நபர்களும் காணொலி காட்சி வாயிலாக மருத்துவர்களிவம் ஆலோசனைகளைப் பெறுகின்றனர். இவர்களில் கொரோனா தொற்று அறிகுறியுடன் இருந்த 105 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் 1,439 நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க : TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!