சென்னை வில்லவிவாக்கத்தில் மனைவியை சந்தேகப்பட்டு பெற்ற மகளையே தந்தை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பெற்ற மகளையே கொலை செய்த தந்தை ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவித்த போலீசார் கூறியிருப்பதாவது, “ லாவண்யா மீது அவரின் கணவர் ராதாகிருஷ்ணன் சந்தேகப்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். லாவண்யா குறித்து வதனஸ்ரீயிடம் ராதாகிருஷ்ணன் விசாரித்தபோதெல்லாம் அவள் அம்மாவை குறித்து எந்த தகவலையும் சொல்லாமல் இருந்திருக்கிறார். சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த ராதாகிருஷ்ணன் கதவைத் திறக்கும்படி மகளிடம் கூறியிருக்கிறார். அதற்கு வதனஸ்ரீ மறுத்திருக்கிறாள். ஆனால், ராதாகிருஷ்ணன் லாவண்யாவின் செல்போனைக் கொண்டு வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.




உடனே வதனஸ்ரீ போன் கொண்டு வந்திருப்பதாக என்னிடம் சத்தியம் செய்யுங்கள். அதன்பிறகு கதவைத் திறக்கிறேன் என்று தனது அப்பாவிடம் கூறியுள்ளார். அதற்கு ராதாகிருஷ்ணனும் சத்தியம் செய்திருக்கிறார். இதனால், வதனஸ்ரீயும் சாவியை எடுத்து கதவைத் திறந்திருக்கிறார். அப்போது, லாவண்யா குறித்து வதனஸ்ரீயிடம் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார். ஆனால், தந்தையிடம் தனது தாய் குறித்து வதனஸ்ரீ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.


இதனால், ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் மகள் என்றும் பாராமல் வதனஸ்ரீயின் மார்பு, வயிறு, கழுத்து என்று கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அப்போது, ராதாகிருஷ்ணன்-லாவண்யாவின் மனவளர்ச்சி குன்றிய மகன் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தான். அவனை லாவண்யாவின் தங்கை சரண்யா வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர், ராதாகிருஷ்ணனை கைது செய்து, கத்தியையும் பறிமுதல் செய்துள்ளோம்.”


இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.





முன்னதாக, சென்னை, வில்லிவாக்கத்தில் தனது மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார் லாவண்யா. இவரது கணவர்தான் கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன். நர்சிங் படித்த லாவண்யாவிற்கும், ராதாகிருஷ்ணனுக்கும் 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. லாவண்யா நர்சாக பணிபுரிந்து வருகிறார். ராதாகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருப்பதுடன் அடிக்கடி தனது மனைவி மீதும் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.


இதனால், லாவண்யா தனது மகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மகனுடன் தனியாக வசித்து வருகிறார். லாவண்யா இல்லாத நேரங்களில் ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து குழந்தைகளை அவ்வப்போது வெளியே அழைத்துச் செல்வார். இதன் காரணமாகவும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு லாவண்யாவிற்கும், ராதாகிருஷ்ணனுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் லாவண்யாவின் செல்போனை ராதாகிருஷ்ணன் எடுத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில்தான், கடந்த 30-ந் தேதி இரவு ராதாகிருஷ்ணன் மகள் வதனஸ்ரீயின் செல்போன் எண்ணில் இருந்து போன் செய்துள்ளார். அப்போது, அவரது மனவளர்ச்சி குன்றிய மகனின் குரல் கேட்டுள்ளது. மகனை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, லாவண்யா வேலை பார்க்கும் இடத்திற்குதான் அழைத்து வருவதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.




இதனால், பதற்றமடைந்த லாவண்யா அண்டை வீட்டாருக்கு போன் செய்து தனது மகள் வீட்டில் இருக்கிறாளா? என்று கேட்டுள்ளார். அவர் வீடு பூட்டியுள்ளது. டிவி சத்தம் கேட்கிறது. ஆனால், வதனஸ்ரீ பதிலளிக்கவில்லை என்று கூறியுள்ளார். மீண்டும் கணவருக்கு போன் செய்த லாவண்யா தனது மகள் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு ராதாகிருஷ்ணன் “அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவளை நீ நல்லா வளர்த்திருக்க. நான்தான் பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்று கூறிவிட்டு இணைப்பை மீண்டும் துண்டித்துவிட்டார்.


சற்றுநேரத்தில் லாவண்யா தங்கை சரண்யா, லாவண்யாவிற்கு போன்செய்து ராதாகிருஷ்ணன் தனது வீட்டிற்கு வந்ததாகவும், அவரது ஆடையில் ரத்தக்கறைகள் இருந்ததாகவும் பதற்றத்துடன் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த லாண்யா வீட்டிற்கு உடனடியாக சென்று பார்த்தபோது வதனஸ்ரீ பாத்ரூமில் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். தனது மகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார் லாவண்யா. ஆனால், வதனஸ்ரீ உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.


குடிப்பழக்கம், சந்தேக புத்தியால் பெற்ற மகளையே தந்தை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.