செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உயிரிழந்த பிறகு தனது கண்களை தானம் செய்துள்ளார்.


செங்கல்பட்டு விஜய் மக்கள் இயக்க நிர்வாகி


செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த திருத்தணி என்பவரது மகன் கரண் (25). இவர் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் மாமண்டூர் கிளை தலைவராக பதவி வகித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மோகனப்பிரியா என்கிற மனைவியும், ஒரு வயதில் எழிலரசி என்கிற மகளும் உள்ளனர். இவர் செங்கல்பட்டு வேண்பாக்கம் பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வந்தார்.




விபத்தில் சிக்கிய கரண்


கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தனது மகளுக்கு மருந்து வாங்க நெல்வாய் கூட்ரோடு பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது கரணின் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த படுகாயம் அடைந்த கரண் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


 



கண் தானம் செய்த சான்றிதழுடன் குடும்பத்தினர் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்


இறந்தும் உயிர் வாழும் கண்கள்


இந்நிலையில் கடந்த 12-ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனிடையே கரண் விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றி வந்த போது தளபதி விஜய் விழியகத்தில் பதிவு செய்து இருந்தார். இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்த கரணின் உடலில் இருந்து அவரது இரு கண்களும் எடுக்கப்பட்டு  விழியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.



செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அளித்த சான்றிதழ்


உயிரிழந்த கரணின் விருப்பத்தின்படி தளபதி விஜய் விழியகம் தொடங்கி முதன்முதலாக கரணின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கண் தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. 




இது குறித்து செங்கல்பட்டு  மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்ததாவது :  எங்களின் வழிகாட்டியாக  தளபதி விஜய் திகழ்ந்து வருகிறார்.  அவரின் அறிவுறுத்தலின்படி பல சமூக  மற்றும் மக்கள் பணிகளை செய்து வருகிறோம்.  அந்த வகையில்    எங்களுடன் பயணித்த ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருடைய கண்கள் தானம் செய்திருப்பது  மனதுக்கு ஆறுதலை தருகிறது.  ஒவ்வொருவரும்  ரத்ததானம், கண் தானம் உள்ளிட்டவத்தை செய்ய முன்வர வேண்டும்.  கரணை இழந்து வாடும், குடும்பத்திற்கு    எங்களால் முடிந்த அளவு உதவியை தொடர்ந்து செய்வோம் என தெரிவித்தனர்  .


விஜய் மக்கள் இயக்க பணிகள் ( vijay makkal iyakkam ) 


தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மக்கள் பணிகள் செய்ய வேண்டும் எனவும் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் எடுக்கப்படும் முன்னேற்பாடுகளை சமூக வலைதளத்தில் கொண்டு சேர்ப்பதற்காக யூடியூப் சேனல், அதிகாரப்பூர்வ ட்விட்டர், பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள்  மூலம் மக்களிடையே, விஜய் மக்கள் இயக்கம் தொடர்ந்து நேரடி தொடர்பில் இருந்து வருகிறது. இதுபோக தளபதி விஜய் குருதியகம் என்ற பெயரில், ரத்த தேவைப்படுபவர்களுக்கு ரத்தம் அளிப்பதற்கு ஏதுவான மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே தளபதி விழியகம் என்ற செயலையும் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை கண்தானம் மற்றும் ரத்தம் தானம் செய்ய நடிகர் விஜய் ஊக்குவித்து வருகிறார்.