சென்னை புறநகரில் நேற்று இரவில் தொடங்கி, இன்று அதிகாலை வரை, தொடர்ந்து பெய்த மழை மற்றும் இடி, மின்னல், சூறைக்காற்றால், சென்னை விமான நிலையத்தில் 17 வருகை விமானங்கள், 18 புறப்பாடு விமானங்கள், மொத்தம் 35 விமான சேவைகள்  தாமதமாகி, பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்


சென்னை மட்டும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை ( Chennai Rain )


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை, விடிய விடிய இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்துகொண்டு இருந்தது. இடி  மின்னல் சூறைக்காற்று காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.


டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மதுரை, திருச்சி, கோழிக்கோடு, கோவா, ஹைதராபாத், கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 17 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானிலை வட்டமடித்து பறந்தன. அதன் பின்பு அவ்வப்போது இடி மின்னல் சூறைக்காற்று ஓயும்போது, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின. 


வானில் வட்டம் அடித்த விமானங்கள்


அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய அபுதாபி, துபாய், கோலாலம்பூர், சிங்கப்பூர், டெல்லி, மும்பை, கொச்சி, கண்ணூர், திருவனந்தபுரம், கோழிக்கோடு, இந்தூர், உட்பட 18 விமானங்கள் சுமார் இரண்டு மணி நேரம் வரை தாமதமாக நேற்றைய நாளில் புறப்பட்டு சென்றன. சென்னை விமான நிலையப் பகுதியில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் விட்டு விட்டு பெய்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் வருகை புறப்பாடு விமானங்கள் 35 விமானங்கள் தாமதமாகி, பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். 


ஓடுபாதையில் தண்ணீர் இல்லை


இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இடி மின்னல் சூறைக்காற்று இல்லாமல், எவ்வளவு கனமான மழை பெய்தாலும், விமான சேவைகளை  பாதிக்கப்படாமல், வழக்கம்போல் இயக்க முடியும். ஆனால் அதிக அளவில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்று இருந்ததால், பாதுகாப்பு காரணமாக, விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்பட்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்துக்கு  இடி மின்னல்தான் முக்கிய காரணம். ஆனால் ஓடுபாதையில் தண்ணீர் போன்ற பாதிப்புகள் எதுவும், சென்னை விமான நிலையத்தில் ஏற்படவில்லை என்று கூறுகின்றனர்.


வானிலை நிலவரம் சொல்வது என்ன ?


தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.  


தமிழ்நாட்டை பொறுத்தவரை திருப்பூர்,  கோயம்புத்தூர்,  திண்டுக்கல் ,தேனி,  ஆகிய மாவட்டங்களிலும் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி. மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.


 சென்னை மற்றும் அதன் புறநகர் வானிலை முன்னறிவிப்பு


வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.  நகரில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது