கடந்த மாதத்தில் 61.56 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளனர்.


இதுதொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.
01.01-2022 முதல் 31.07.2022 வரை மொத்தம் 3,01,15,886 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


01-08-2022 முதல் 31-08-2022 வரை மொத்தம் 56,66,231 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 61,12,906 பயணிகளும், அக்டோபரில் 61,56,360 பயணிகளும் இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


அதிகபட்சமாக 21.10.2022 அன்று 2,65,683 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் அக்டோபர் மாதத்தில் 43,454 பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


2022, அக்டோபர் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 18,57,688 பயணிகள் பயணம் செய்துள்ளனர். பயண அட்டை பயணச்சீட்டு (Travel Card Ticketing system) முறையைப் பயன்படுத்தி 36,33,056 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.


சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை  பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மெட்ரோ (Chennai Metro) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் சுரங்கம் தோண்டி அமைக்கப்பட்டுள்ளன.






சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் வரையும் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவில் 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.


இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில் 26.1கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை 2025-ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, சென்னை நந்தனத்தில் மெட்ரோ ரயில் தலைமை அலுவலகக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27ம் தேதி திறந்து வைத்தார். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமையகம்  கோயம்பேட்டில் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தில் இடவசதி போதிய அளவில் இல்லை.


இதன்காரணமாக, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 3.90 லட்சம் சதுரஅடியில், ரூ.365 கோடி செலவில் 12 மாடிகளுடன் இரண்டு பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.