தாம்பரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் எஸ்.ஆர்.ராஜா. இவர் கடந்த 2006 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் தாம்பரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2021-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அவர், தாம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும், தாம்பரம் தொகுதி முதன் முதலில் உருவாக்கப்பட்டபோது, இவர் தி.மு.க. தாம்பரம் மாநகர செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், எஸ்.ஆர். ராஜா சிங்கப்பெருமாள் கோயில் அடுத்துள்ள மால்ரோசா புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்று ஊழியர்களை மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.



சென்னையில் புறநகர் பகுதியாக இருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில, மல்ராசாபுரம் ஆகிய பகுதியில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

 

 

விசாரணை

 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகே டேஜுங் மோபட்ட என்ற நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் எம்.டி.யாக ஆர்.கே.ஷர்மா பொறுப்பு வகிக்கிறார். ஆர்.கே. ஷர்மா இந்த நிறுவனத்தில் சில முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்டதாக புகாரின் அடிப்படையில் கடந்த, 06.8.22 அவர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  தற்பொழுது வாடகை இடத்தில் இந்த நிறுவனம் இயங்கி வரும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வைரல் வீடியோ

 

 

குறிப்பாக சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் வீடியோவில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா ஒருமையில் பேசி இந்த நிறுவனத்தை இழுத்து மூடி விடுவோம் என கூறுகிறார். மற்றொரு நபர் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபடும் பொழுது மிகவும் ஒருமையில் பேசி தகாத வார்த்தையில் அந்த நபரை திட்டுகிறார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் புகார் அளிக்கப்படும் எனக் கூறியதும், கோபமடைந்த எஸ்.ஆர்.ராஜா மேலும் அவரை திட்டி அங்கிருந்து செல்ல முற்படுகிறார். அப்பொழுது எதிரே இருந்த நம்பர் நான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஓட்டு போட்டவன் எனக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என பேசும் வீடியோக்கள் இன்று சமூக வலைத்தளம் முழுவதும் வைரலாக பரவியது.

 

 

இதுகுறித்து நிறுவனத்தின் சி.இ.ஓ. கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், எங்கள் நிறுவனத்தில் முன்னாள் எம்.டி( MD) ஆர்.கே. சர்மா ஊழல் புகார் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் சுமார் 230 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தொலைபேசி வாயிலாக எங்களுக்கு மிரட்டல் கொடுத்தார். இந்நிலையில் இன்று திடீரென நிறுவனத்துக்குள் நுழைந்து  எங்களை மிரட்டி உள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலரிடம் இணையதளம் வாயிலாக புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தார்.



 

இது குறித்து தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கூறுகையில், நண்பர் தனது இடத்தில் பிரச்சனை உள்ளதாக அழைத்துச் சென்றார். உரிமையாளராக இருக்கும் என் நண்பருக்கு அங்கு வாடகைக்கு இருக்கும் நபர்கள் வழி விடுவதில்லை, எனவே அதுகுறித்து விசாரிப்பதற்காகவே நான் அங்கு சென்றேன் என விளக்கம் அளித்துள்ளார்.

 

 

வழக்கு பதிவு

 

நிறுவனத்தின் CEO கொடுத்த புகார் மீது தாம்பரம் மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட, மறைமலை காவல் நிலையத்தில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா மீது  294 b, 447, 506(Il) ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

முதல் தகவல் அறிக்கை 

 


முதல் தகவல் அறிக்கையில் மற்றும் நான்கு குற்றவாளிகளின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியாக இடத்தின் உரிமையாளர் பெயர் மண்ணுகோயல், மண்ணு கோயல் மகன், 3வது குற்றவாளியாக சட்டமன்ற உறுப்பினர் ராஜா, நான்காவது குற்றவாளியாக சட்டமன்ற உறுப்பினரின் ஓட்டுநர் ஆகியோர் பெயர் முதல் தகவல் அறிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளது.