சென்னை: தனியார் ஆம்னி பேருந்துகள் தீபாவளி சிறப்பு வாரத்தைக் காரணமாக காட்டி டிக்கெட் கட்டணங்களை பல மடங்காக உயர்த்தி வரும் நிலையில் அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்வு
அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை நாடாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, வெளிநகரங்கaளில் வேலை, கல்வி, வியாபாரம் போன்ற காரணங்களுக்காக தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பத் தயாராகி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நிலையங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் அனைத்திலும் ஏற்கனவே பெரும் கூட்ட நெரிசல் நிலவுகிறது. இதே சமயத்தில், தனியார் ஆம்னி பேருந்துகள் தீபாவளி சிறப்பு வாரத்தைக் காரணமாக காட்டி டிக்கெட் கட்டணங்களை பல மடங்காக உயர்த்தியுள்ளன.
தீபாவளி பண்டிகை பேருந்து கட்டணம்
சென்னை–கோவை இடையேயான ஆம்னி பேருந்து கட்டணம் ரூ.600 முதல் ரூ.900 வரை இருக்கும். ஆனால் தற்போது அந்த வழித்தடத்தில் கட்டணம் ரூ.2000 முதல் ரூ.3000 வரை உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னை–மதுரை செல்லும் பேருந்துகளில் டிக்கெட் விலை ரூ.2000 முதல் ரூ.3200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை–திருநெல்வேலி ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.3500, ஏ.சி. இருக்கை கட்டணம் ரூ.2700 என உயர்வடைந்துள்ளது. இந்த அளவுக்கு அதிக கட்டணம் விதிப்பதால் பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பொதுமக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு பண்டிகைக்கும் பேருந்து டிக்கெட் விலை எதற்கும் அடங்காமல் போகிறது. அரசு உடனடியாக தலையிட்டு கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தளங்களில் எழுந்துள்ளன. இதனையடுத்து, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வெளிட்டுள்ள அறிக்கையில்.,
14.10.2025 முதல் 21.10.2025 வரையில் தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு விழாக்காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை மூலம் உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாக போக்குவரத்து ஆணையர் அவர்களின் அறிவுரையின் கீழ் காணும் வரன்முறைகளை பின்பற்றும் படி அனைத்து சரக இணைப்போக்குவரத்து ஆணையர்கள் /துணைப்போக்குவரத்து ஆணையர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. எதிர்வரும் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.
2. அரசு பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகள் செல்ல சுங்கச்சாவடியில் தனி வழி (Separate Bay) அமைக்க சுங்க சாவடி அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சீரான வாகன போக்குவரத்தினை உறுதிசெய்ய தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
3. மோட்டார் வாகன ஆய்வாளர்களை சுங்க சாவடிகளில் பணியமர்த்தி அரசு பேருந்துகள் விரைவாக சுங்கசாவடியை கடந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
4. அவ்வாறு சுங்கச்சாவடிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பணியின் போது தமிழ்நாடு மற்றும் பிற மாநில ஆம்னி பேருந்துகளையும் ஆய்வு செய்து உரிய வரி மற்றும் ஆவணங்கள் நடப்பில் உள்ளதா என்பதை கண்டறிந்து, குறைபாடுடைய வாகனங்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணிகள் கூடுதல் கட்டணம் மற்றும் பிற புகார்களுக்கு கீழ்காணும் எண்கள் மூலம் தொலைப்பேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்க வேண்டப்படுகிறது.
- போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை - 1800 425 5161
- இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (வடக்கு) - 97893 69634
- இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (தெற்கு) - 93613 41926
- இணைப்போக்குவரத்து ஆணையரகம், மதுரை - 90953 66394
- இணைப்போக்குவரத்து ஆணையரகம். கோயம்புத்தூர் - 93848 08302
- துணைப்போக்குவரத்து ஆணையாகம், விழுப்புரம் - 96773 98825
- துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர் - 98400 23011
- துணைப்போக்குவரத்து ஆணையாகம், சேலம் - 78456 36423
- துணைப்போக்குவரத்து ஆணையரகம், ஈரோடு - 99949 47830
- துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி - 90660 32343
- துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர் - 90257 23800
- துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருநெல்வேலி - 96981 18011
- துணைப்போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர் - 95850 20865
மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல், போக்குவரத்து துறையின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கையினை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.