தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். அமாவாசையின் போது, கடவுள்களை வழிப்பட்டு, மக்கள் ஒருவருக்கொருவர் வீட்டிற்கு சென்று பலகாரங்களை பரிமாறி கொள்கின்றன. புதிய ஆடைகளை அணிந்துகொண்டு வீட்டிற்குள் தீபங்களும், வீட்டிற்கு வெளியே விளக்குகளை ஏற்றியும் தீபாவளியை கொண்டாடுகின்றன.


களைகட்டும் தீபாவளி:


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நவம்பர் வரை தீபாவளிக்கான தேதிகள் மாறுபடும். இந்தநிலையில், இன்று நாடுமுழுவதும் நவம்பர் 12ம் தேதியான இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து கோயில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்தாண்டு புதிதாக திருமணமானவர்கள் தங்களது மாமியார் வீட்டில் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, தீபாவளி நாளான இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


காஞ்சிபுரத்தில் பூ விலை உயர்வு


தீபாவளி பண்டிகையின் காரணமாக பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. இன்றையை தினம் தீபாவளி வருவதனால் புதுமணத் தம்பதிகள் மற்றும் இல்லங்களில் தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் இன்று பூக்களை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் மல்லிகை பூ மற்றும் கனகாபூரம் பூ கிலோ நேற்று 600 விற்பனை செய்த நிலையில் இன்று ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாமந்திப்பூ ரோஜா பூ கிலோ 300 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. மேலும் தொடர் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்வு அதிகமாகி வருகிறது.

 



பூக்கடை சத்திரம் பகுதியில் போதிய வாகன நிறுத்துமிடம் இல்லாததால் பூக்களை வாங்கிட வருகை தருவோரும், பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிட வருகை தருவோரும் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்லும் நிலையானது ஏற்பட்டுள்ளது.

12 லட்சத்திற்கு மேலானோர் சொந்த ஊர்களுக்கு பயணம்: 


தீபாவளி பண்டிகை எதிரொலியாக சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர்கள் தத்தம் விருப்பமான கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் செய்து வருகின்றன. 


 

தீபாவளி சிறப்பு ரயில்கள்: 


தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை - தாம்பரம் இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 8.10 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது. அதேபோல், தீபாவளி பண்டிகை முடித்து ஊர் திரும்புவோருக்கு ஏதுவாக நாளை நெல்லையில் இருந்து சிறப்பு ரயிலும் இயக்கப்பட இருக்கிறது. திருநெல்வேலியிலிருந்து நாளை மாலை 3.45க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயிலானது தென்காடி, ராஜபாளையம், சிவகாசி, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.


தீபாவளி - நாளை அரசு விடுமுறை: 


தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 18ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.