வேகவதி ஆறு

 

சென்னைக்கு அடுத்து மிக வேகமாக வளர்ந்து வரும் நகர்களின் பட்டியலில் காஞ்சிபுரம் முக்கிய இடத்தை வகித்து வருகிறது. காஞ்சிபுரம் நகரில் இருக்கும் மழை நீரை வெளியேற்றுவதற்கு பிரதானமான வடிகால்வாய் ஆக செயல்பட்டு வருகிறது வேகவதி ஆறு. தற்போது கழிவுநீர் கால்வாய் போல இருக்கும் வேகவதி ஆறு, ஒரு காலகட்டத்தில் காஞ்சிபுரத்தின் பொதுமக்களுக்கு நீர் தேவையை பூர்த்தி செய்யும் ஆறாகும் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வேகவதி ஆறு முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கால்வாய் போன்று வேகவதி ஆறு சுருங்கி போனதால் நீர் வெளியேற முடியாமல், மழைக்காலங்களில்  அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.



 

ஆக்கிரமிப்புகளால் பாதிப்பு

 

அகலமான ஆற்றை, ஆக்கிரமிப்பாளர்கள் கால்வாயாக மாற்றியுள்ளனர். இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில் காஞ்சிபுரம் நகர் பகுதியில், வசித்த பொதுமக்கள் மழைநீர் வீடுகளில் புகுந்ததால் மிகுந்த பாதிப்படைந்தனர். குறிப்பாக காஞ்சிபுரம் வரலாறு காணாத அளவு, நகர் முழுவதும் மழைநீர் சூழ்ந்தது  குட்டித் தீவாக மாறியது. இதற்கு முக்கிய காரணமாக வேகவதி நதிக்கரையில் ஆக்கிரமிப்பு காரணம் என கண்டறியப்பட்டது.

 



 

ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு

 

ஆக்கிரமிப்புகளை மீட்கும் முயற்சியாக, அப்பகுதியில் இருப்போருக்கு மாற்று இடமாக, மத்திய அரசின் 'ஆவாஸ் யோஜனா' திட்டத்தில், தமிழக குடிசை மாற்று வாரியம் மூலம், கீழ்கதிர்பூரில், 200 கோடி ரூபாய் மதிப்பில், 2,112 வீடுகள், கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே கட்டி முடிக்கப்பட்ட இந்த வீடுகள், 2019 இல், அப்போதைய முதல்வர் பழனிசாமி காஞ்சிபுரம் வந்தபோது திறந்து வைத்தார்.



 

சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிசை மாற்று வாரிய வீட்டுக்கு, 3.5 லட்சம் ரூபாய் செலுத்தினால் போதும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது , இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் படிப்படியாக குறைந்து தற்போது 1.5 லட்சம் கட்டினால் போதும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தொகையை மாத தவணையாகவும் செலுத்தலாம் என தெரிவித்தும், ஒப்புக்கொள்ளாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு போக்கு காட்டி வருகின்றனர்.

 

நீர்நிலை ஆக்கிரமிப்புகள்

 

நீர் நிலை பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு கட்டடங்களாக இருந்தாலும், விவசாயம் செய்தாலும், ஆக்கிரமிப்பை அகற்றி, அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்க, தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிலங்கள் மீட்பு அதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுதுமே, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும், ஏராளமான நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.




 

தயக்கம் ஏன்?

 

இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக, வருவாய் துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், 25 ஆண்டுளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்து, அகலமாக இருந்த வேகவதி ஆற்றை கால்வாயாக மாற்றிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.



 

இதனால், ஒவ்வொரு பருவமழைக்கும், பாலாற்றில் இருந்து வேகவதி ஆற்றுக்கு தண்ணீரை திருப்பி விட முடியாத சூழல் உள்ளது.  ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளதால், பாலாற்றில் இருந்து தண்ணீரை திருப்பி விட்டால், வீடுகளில் வெள்ள நீர் புகுந்துவிடும். இதன் காரணமாகவே, வேகவதி ஆற்றில் தண்ணீர் செல்ல முடியாத சூழல் உள்ளது.  அடுத்த பருவமழைக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என மழையால் தொடர்ந்து பாதிப்படையும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

கரையோரம் வசிக்கும் மக்கள் சொல்வது என்ன?


நீண்ட வருடங்களாக இதே பகுதியில் குடும்பம் குடும்பமாக வசித்து வருகிறோம்.  பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் இங்கிருந்து சென்று வருகிறார்கள். தற்போது அரசு கட்டியுள்ள இடம் நகர் பகுதிக்கு, மிக தொலைவில் உள்ளது. எங்கள் வாழ்வாதாரம் அனைத்தும் நாங்கள் இருக்கும் பகுதியை சுற்றி உள்ளதால், ஆனால் அங்கு சென்றால் தனித்து விடப்படுமோ, எங்களுக்கு இதே பகுதியில் மாற்று வழிக்கு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என தெரிவிக்கின்றனர். 



 

மாவட்ட ஆட்சியர் என்ன சொல்கிறார்?

 

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஆர்த்தி தொடர்புகொண்டு கேட்டபோது,  இதுவரை அவர்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து காலக்கெடுவும் முடிவடைந்து விட்டது. மாவட்ட நிர்வாகம் மூலம் மற்றும் நீதிமன்றம் ஆகியவை பலமுறை காலக்கெடு கொடுத்தும், அவர்கள் சொல்லும் பேச்சை கேட்காமல் அங்கேயே இருந்து வருகின்றனர். விரைவில் அகற்றப்படும் என தெரிவித்தார்