கோடை காலத்தில் எந்த பேருந்து நிலையத்திற்கு சென்றாலும், பண்ருட்டி பெயரை கேட்காமல் இருக்க முடியாது. அதற்கு காரணம் பேருந்து நிலையத்தில் பண்ருட்டி பேருந்துகள் இருக்கிறது என்ற அர்த்தம் கிடையாது. அதற்குக் காரணம் பண்ருட்டி பலா. பலா என்றாலே கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில், கிடைக்கும் பழத்திற்கு தமிழகம் முழுவதும் தனி மவுசுதான். பலாப்பழம் விற்கும் கடையை, கடந்து செல்லும்பொழுது அதன் வாசனை கூட நம்மால் சுவைக்க முடியும். சுவையின் மிகுதியால் தான் முக்கனியில், ஒன்றாக பலா விளங்கி வருகிறது. 

 



 

 

நம்ம ஊரு பண்ருட்டி பலா..

 

பண்ருட்டி அருகே உள்ள நெய்வேலி, சொரத்தூர், கடாம்புலியூர்,  பணிக்கன்குப்பம், மேலிருப்பு, மாம்பட்டு உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் பலாப்பழம் விளைகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பழங்கள் தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, கன்னியாகுமரி போன்ற பெரிய நகரங்களுக்கும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பிவைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் வருடத்திற்கு 45 ஆயிரம் மெட்ரிக் டன் முதல் 50 ஆயிரம் மெட்ரிக் டன் வரை உற்பத்தி நடைபெறுகிறது .இத்தகைய சிறப்பு மிக்க பண்ருட்டிக்கு மற்றொரு சிறப்பாக 200 வருடங்கள் கடந்தும் நூற்றுக்கணக்கில் காய்த்துத் தொங்கும் பாரம்பரிய பலா பழத்தை குறித்து தான் நாம் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

 

2 நூற்றாண்டைக் கடந்த மரம்

 

கடலூர் மாவட்டம் மளிகம்பட்டு,  ராமசாமி சமர்த்தியார், என்பதால் தற்போது பராமரிக்கப்பட்டு வரும் பல மரம் இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்து , பாதுகாக்கப்பட்டு வருகிறது. ராமசாமி குடும்பம் தலைமுறை தலைமுறையாக அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறது. 72 வயதாகும் ராமசாமி, இந்த வயதிலும் கம்பீரமாக விவசாய வேலை செய்து வருகிறார்.  5 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வரும் இவர், பெரும்பாலும் இயற்கை சார்ந்த விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார். இவர் தனது விவசாய நிலத்தில் மா, பலா, முந்திரி, கொய்யா, ஆந்திரா நாவல், நெல்லிக்காய், மிளகு , சிவப்பு சந்தன மரம் உள்ளிட்ட ஏராளமான , வகை மரம் மற்றும் பணப்பயிர்களை பயிரிட்டு வருகிறார்.
  

 



இரண்டு நூற்றாண்டுகள் தாண்டி வளரும் மரத்தைப் பற்றிக் கூறுகையில், கடந்த ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு "பாலூர் பல ஆராய்ச்சி மையத்தில் இருந்து" விதைகளை சேகரிக்க வந்த பொழுது, அவர்கள் வைத்திருந்த எந்திர கருவி மூலம் 150 ஆண்டுகள் இருக்கலாம் என கணித்து கூறினார்கள். அவர்கள் வைத்திருந்த எந்திர கருவியில் 150 ஆண்டுகள் வரை மட்டுமே கணிக்க முடியும் எனவும் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து அவர்கள் கணிப்பின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால், கூட இது 200 ஆண்டுகளை தாண்டிவிட்டது. என்னுடைய கணிப்பு சுமார் 200 ஆண்டுகளில் இருந்து 300 பழமையான மரமாக இது இருக்கலாம். குறிப்பாக இந்த மரம் நாட்டு பழ வகையை சார்ந்தது. 

 

5 தலைமுறைக்கு முன்பு எனது முன்னோர்கள் மரத்தை வைத்திருக்கலாம் , எனது தந்தை சௌந்தரபாண்டியன், அவருடைய தந்தை மாணிக்கவாசகம், அவருடைய தந்தை வையாபுரி, அவருடைய  தந்தை சுப்புராயன் வழிவழியாக இந்த மரத்தை பராமரித்து வருகிறோம். எனது முன்னோரான சுப்பராயன் காலகட்டத்தில் இந்த மரம் வைக்கப்பட்டிருக்கலாம். 200 ஆண்டுகள் பழமையான மரம், 'தானே' புயலின் பொழுது , சில கிளைகள் முறிந்து விழுந்தன. இதனையடுத்து வேளாண் துறை உதவியுடன், மருந்து ஆகியவை தடவை பட்டு தொடர்ந்து பராமரித்து வருகிறோம்.

 



இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த இந்த மரம் வருடத்திற்கு ஆயிரம் பிஞ்சுகள் வரை விடுகிறது. வருடத்திற்கு 175 லிருந்து 200 பழங்கள் வரை கிடைக்கின்றது. இந்த வருடம் கூட பலாமரத்தில் 180 பழங்கள் வரை இம்மரத்திலிருந்து கிடைத்தது . கடலூரில் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரம் மெட்ரிக் டன் வரை பலாப்பழம் உற்பத்தி நடைபெற்றாலும் , இடைத்தரகர்கள் மூலமே எங்களுடைய விவசாய பொருட்களை விற்க முடிகிறது. பலாப்பழத்தை மதிப்புக்கூட்டி விற்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இதற்கெல்லாம் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திடம் கூறுகிறார் ராமசாமி.

 

பல சுளைகளை கொண்டதால் பலாப்பழம் என்பார்கள், ஒரு பக்கத்தில் பலநூறு சுளைகள், அப்பொழுது 200 ஆண்டுகாலம் எத்தனையாயிரம் பழங்கள் எத்தனை லட்ச சுளைகள், தனக்கென்று எத்தனை தலைமுறைகளை உருவாக்கி இருக்குமோ இந்த மரம் ..