சென்னையில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் திடீரென உயிரிழந்ததால், அந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


சென்னை, முகலிவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது மாதா கோவில் தெரு. இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சதீஷ்குமார். இவருக்கு வயது 35. இவரது மனைவி வினோதினி. இவருக்கு வயது 30. இந்த தம்பதியினருக்கு சோனியா என்ற 5 வயது மகளும், மோனிஷ் என்ற 3 வயது மகனும் உள்ளனர். இந்த நிலையில், வினோதினி குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.


இதையடுத்து, சின்ன போரூரில் உள்ள மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு கடந்த 30-ந் தேதி அவருக்கு மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர், வினோதினியை 2 நாட்கள் கழித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.




குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய வினோதிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு வினோதினியை பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி வினோதினி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.


குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்ட இளம்பெண் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் வினோதினி உயிரிழந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவர்களிடமும், மருத்துவமனை ஊழியர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.





வினோதினியின் உறவினர்கள் சிலர் சின்னபோரூரில் வினோதினி அறுவை சிகிச்சை செய்து கொண்ட மருத்துவமனையிலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் போரூர் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இளம்பெண் வினோதினி உயிரிழந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளோம். அதில் தவறு நடந்து இருப்பது தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண