சென்னை சாலிகிராமம் அருணாசலம் சாலையில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாட்சாயிணி. தாட்சாயிணி அதே பகுதியில் செயல்பட்டுவரும் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது நகைக்கடையின் மேலாளர் சாரா என்பவரை விருந்துக்கு அழைத்துள்ளார். இதையடுத்து சாரா தனது நண்பரான நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த சமித் முகமது அபுபக்கருடன் தாட்சாயிணி வீட்டிற்கு விருந்துக்கு வந்துள்ளார்.



ரம்ஜான் என்பதால் தாட்சாயிணி அசைவ விருந்து மற்றும் பிரியாணி ஆகியவற்றை நண்பர்களுக்காக தயார் செய்துள்ளார். விருந்துக்கு வந்த அபூபக்கர் மற்றும் சாராவிற்கு பிரியாணி உள்ளிட்ட அசைவ விருந்து பரிமாறி உள்ளார். இதுபோக தனது வீட்டிற்கு வந்த நண்பர்களே வீட்டை சுற்றி காட்டியுள்ளார் மேலும் சிறிது நேரம் அங்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விருந்துக்கு வந்த நண்பர்கள் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். 



நண்பர்கள் இருவரும் வீட்டை விட்டு சென்ற, சிறிது நேரத்தில், தாட்சாயினி வீட்டின்  இருந்த ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 3 விதமான தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நண்பர்கள் இருவரில் யாராவது ஒருவர் தான் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என தாட்சாயினிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தனது மேலாளர் சாரா உடன் வந்த அபூபக்கர் மீது சந்தேகம் தீவிரமடைந்துள்ளது.




இதையடுத்து அபூபக்கரை வரவழைத்து தாட்சாயினி விசாரித்துள்ளார், அப்போது அபூபக்கர் தான் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என்றும், தனக்கும் இந்த விஷயத்திற்கும் சம்பந்தமில்லை என கூறியுள்ளார். இருந்தும் சந்தேகம் தீராத தாட்சாயினி அபூபக்கரை அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றிற்கு, அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது அபூபக்கரின் வயிற்றில் திருடுபோன நகைகள் இருப்பது தெரிந்தது. வீட்டில் இருந்த போது அபூபக்கர் நகைகளை திருடி பிரியாணியுடன் விழுங்கி கொள்ளையடித்தது தெரியவந்தது.





இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபூபக்கருக்கு 2 முறை இனிமா கொடுத்தும் நகை வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதற்கு மேலும் அவருக்கு இனிமா கொடுத்தால் பயன் இருக்காது என மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று காலை அபூபக்கர் இயற்கை உபாதை கழித்த பொழுது 2 நகைகள் வெளியே வந்தது. மேலும் ஒரு நகைக்காக தாட்சாயினி காத்திருக்கிறார். இதுகுறித்து தாட்சாயிணி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.