செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு கலைப்பொருட்கள் விற்பனைக்கூடத்தில் கடந்த ஜனவரி மாதம் சிலைக் கடத்தல், தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக வைத்திருந்த ராவணன் சிலை உட்பட 12 பழங்கால சிலைகளை மீட்டு, அதன் உரிமையாளரான ஜாவீத் ஷா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த 4-ஆம் தேதி மாமல்லபுரத்திலுள்ள 'The Boutique" என்ற நிறுவனத்தில் சோதனையிட்டபோது சட்டவிரோதமாக 3 பழங்கால சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.




சிலைகள் பதிக்க வைக்கபட்ட இடம், ரகசிய அறையில் 97 செ.மீட்டர் உயரம், 23 செ.மீட்டர் அகலம் கொண்ட உலோகத்தாலான நின்ற நிலையில் உள்ள பார்வதி சிலை, 32 செ.மீட்டர் உயரம், 20 செ.மீட்டர் அகலம் கொண்ட உட்கார்ந்து நிலையிலான மற்றொரு பார்வதி சிலை, 35 செ.மீட்டர் உயரமும், 26 செ.மீட்டர் அகலம் கொண்ட நடனமாடும் சிவன் சிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்குரிய ஆவணங்கள் ஏதும் விற்பனை கூட உரிமையாளர்களிடம் இல்லை. 




3 பழங்கால சிலைகளான பார்வதி அம்மன் சிலை, சிவன் சிலை உட்பட சிலைகளைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் தமிழ்நாடு கோயில்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் மேலும் கைப்பற்றப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூ.2.50 கோடிக்கு மேல் இருக்கலாம் எனவும் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சிலைகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


கைப்பற்றப்பட்ட அனைத்து சிலைகளையும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் சட்டவிரோதமாக கடத்துவதற்காக திட்டம் தீட்டி அதற்கான சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வைத்து சிலை கடத்தல் முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்