வண்டலூர் உயிரியல் பூங்கா

 

சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய சுற்றுலா தளமாக, அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் , வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை போன்ற தினங்களில் வழக்கத்தை விட மூன்றிலிருந்து , நான்கு மடங்கு அதிக அளவு மக்கள் உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிவது வழக்கம். 



 

2000 விலங்குகள்

 

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. மேலும் வண்ணத்துப் பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடை விடுமுறை என்பதால், வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே தினத்தையொட்டி ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து இருந்தனர்.

 



மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் சிங்கம் சஃபாரி

 

கொரோனா காலகட்டத்தில் கடந்த கடந்த மூன்று ஆண்டில் வண்டலூர் பூங்காவில் வனப்பகுதியில் திறந்த வெளியில் விடப்பட்டு உள்ள சிங்கங்களை அதன் இருப்பிடத்திற்கே வாகனத்தில் சென்றுபார்க்கும் சிங்கம் சபாரி, மீனகம், சிறுவர் விளையாட்டு பூங்கா என பலவற்றுக்கு பூங்கா நிர்வாகம் அனுமதி அளிக்காமல் இருந்து வந்தது . இதன் பின்னர் நோய் தொற்று குறைந்ததும் பூங்காவில் மூடப்பட்டு இருந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், இரவு நேர விலங்குகள், சிறுவர் பூங்கா என ஒவ்வொன்றாக மீண்டும் திறக்கப்பட்டது.

 



ஆனால் சிங்கம் சபாரி மட்டும் மீண்டும்  தொடங்கப்படாமலேயே இருந்து வருகிறது. பார்வையாளர்களும் பலர் சிங்கம் சபாரி துவங்கப்பட்டிருக்கும் என நம்பிக்கையில், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்த மாத இறுதியில், சோதனை முறையில் தொடங்க பூங்கா அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்

 

பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது புதியதாக இரண்டு சிங்கங்கள் வந்துள்ளன. இதன் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. இந்த சிங்கங்களுக்கு முறையாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே  சிங்கம் சபாரிக்கு பெரியவர்களுக்கு 100 ரூபாயும் குழந்தைகளுக்கு, 60 ரூபாயும் வசூலித்ததைப் போல, சிங்கம் சபாரிக்கு அதே அளவு கட்டினத்தை வசூலிக்க திட்டம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.