தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது பேருந்து ஆகும். குறிப்பாக, தலைநகர் சென்னையில் பேருந்து பயணத்தை நம்பியே பெரும்பாலான மக்கள் உள்ளனர். மெட்ரோ, மின்சார ரயில்கள் இருந்தாலும் பேருந்துகளை நம்பியே வேலைக்குச் செல்வோர், பணிக்குச் செல்வோர், மாணவ - மாணவியர்கள் பலரும் உள்ளனர்.
சில்லரை பிரச்சினை:
பொதுவாக, பேருந்தில் நடத்துனர்களுக்கும் - பயணிகளுக்கும் சில்லரையில்தான் வாக்குவாதம் மிகப்பெரிய அளவில் உருவாகும். இது பல நேரங்களில் கைகலப்பில் முடிவதும் உண்டு. இந்த சூழலில், சென்னை மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
மாநகர பேருந்துகளில் பயணிகள் ஏறும்போது பயணச்சீட்டுக்கு உரிய சில்லரையுடன் பயணிக்க வேண்டும் என்ற வாக்குவாதத்தில் நடத்துனர்கள் ஈடுபடுவதாக பயணிகளிடம் இருந்து தொடர்ச்சியான புகார்கள் வருகின்றது. எனவே, பேருந்துகளில் பயணிகளில் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லரை கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யக்கூடாது.
உத்தரவு:
பயணச்சீட்டைப் பெற பயணிகள் அளிக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதி தொகையை வழங்குமாறு மாநகரப் போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பணிமனைகளில் பணியின்போது நடத்துனர்களுக்கு வழங்கப்படும் முன் பணத்தை பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது முறையாக பயன்படுத்த வேண்டும்.
பயணிகளிடம் சில்லரை தொடர்பான விவாதங்கள் தவிர்த்து கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க்யூ ஆர் கோடு:
போக்குவரத்து கழகத்தின் இந்த அறிவிப்புக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். போன்பே, ஜி பே வந்த பிறகு தற்போது பெரும்பாலான மாநகர பேருந்துகளில் க்யூ ஆர் கோடு மூலமாக டிக்கெட் பெற்றுக்கொள்ளும் நடைமுறை வந்துள்ளது. இதனால், சில்லரை கேட்டு பேருந்துகளில் நடத்துனர்கள் - பயணிகள் இடையே நடக்கும் சண்டை பெரும்பாலும் குறைந்துள்ளது. மாநகர பேருந்துகள் மட்டுமின்றி வெளியூர் செல்லும் பேருந்துகளிலும் க்யூ ஆர் கோடு மூலமாக பணம் அனுப்பப்படுகிறது.
சென்னையில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் தொலைதூரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.