சென்னை துரைப்பாக்கம் பகுதியில் சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம் பெண்ணின், உடல் மீட்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


ஓஎம்ஆர் சாலை


சென்னை புறநகர் பகுதி மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தலைநகரமாக இருக்கக்கூடிய சென்னையில் இட நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இட நெருக்கடி காரணமாக சென்னை புறநகர் பகுதிகள் அதிக வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் ( ஓஎம்ஆர் சாலை) பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக ஓஎம்ஆர் சாலையில் அதிகளவு ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


குறிப்பாக வேளச்சேரி முதல் சோழிங்கநல்லூர் வரை ஏராளமான ஐடி நிறுவனங்களில் பல ஆயிரக்கணக்கான பெண்களும் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள துரைப்பாக்கம் பகுதியில் சூட்கேசில், பெண் ஒருவரது சடலம் கைப்பற்றப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக துரைப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 


சூட்கேஸிலிருந்து துர்நாற்றம்


இன்று காலை சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் அருகே உள்ள குமரன் குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசி உள்ளது. அந்தப் பகுதியில் கேட்பாரற்று கிடந்த சூழ்கேசிலிருந்து இந்த துர்நாற்றம் வீசுவதை அப்பகுதி மக்கள் கண்டுபிடித்துள்ளனர். சூட்கேசிலிருந்து துர்நாற்றம் வீசவே சந்தேகம் அடைந்த , குடியிருப்பு வாசிகள் உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துரைப்பாக்கம் போலீசார், சூட்கேஸை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். 


காவல்துறையினர் சூட்கேஸை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது, சூட்கேசின் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினர் அங்கு உஷார் படுத்தப்பட்டு, முதற்கட்ட தகவல்களை சேகரிக்க தொடங்கினர் . தொடர்ந்து இந்த சூட்கேஸ் தொடர்பாக அப்பகுதி மக்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சூட்கேஸில் இருந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சூட்கேஸில் இருந்த பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்தால் போலீசார் உடனடியாக, தடயவியல் நிபுணர்களை வரவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


பல்வேறு கோணங்களில் விசாரணை


சூட்கேஸில் இருந்த பெண் யார் ? இங்கு கொலை நடைபெற்றதா அல்லது வேறு எங்காவது கொலை செய்துவிட்டு உடலை இங்கு வீசி சென்றார்களா ? உள்ளிட்ட கோணத்தில் துரைப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் மணலி பகுதியை சேர்ந்த தீபா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை துரைப்பாக்கம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 


தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை


ஓஎம்ஆர் பகுதி என்பது நள்ளிரவில் கூட பரபரப்பாக இயங்கக்கூடிய பகுதியாக உள்ளது. இப்படி சென்னை புறநகர் பகுதிகளில் பரபரப்பாக இயங்கக்கூடிய பகுதியில் , துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இது போன்ற சம்பவம் நடைபெற்று இருப்பது, பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த சம்பவத்தை தனிப்படை அமைத்து , கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகளை கைது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.