Chennai Peripheral Ring Road Latest update: சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு (CPRR) சென்னையை மாற்றக்கூடிய மிக முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது. ரூபாய் 12,301 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது.
Chennai Peripheral Ring Road project - சென்னை எல்லை சாலை திட்டம்
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர, சென்னை வெளிவட்டச் சாலைகள் அமைக்கப்பட்டன. அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்தை கருத்தில் கொண்டு தற்போது, "சென்னை எல்லைச்சாலை" அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எவ்வளவு தூரம் இந்த சாலை அமைகிறது ?
இந்த சாலை செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் - பூஞ்சேரி முதல் எண்ணூர் துறைமுகம் வரை அமைய உள்ளது. இந்த சாலை 132.87 கிலோமீட்டர் தூரத்திற்கு பத்து வழிச்சாலையாக அமைய உள்ளது. 6 வழி எக்ஸ்பிரஸ் சாலையாகவும், 2 புறங்களில் 2 வழி சர்வீஸ் சாலை அமைய உள்ளது.
120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்
சென்னை எல்லை சாலை மொத்தம் 5 பகுதிகளாக அமைய உள்ளன. இந்த சாலையில் வாகனங்கள் 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த சாலை மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களுக்கு எளிதாக செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாலையின் வழித்தடம் என்ன ? Chennai Peripheral Ring Road Route Map
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை (NH32). ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலை (NH48) மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் தேசிய நெடுஞ்சாலை. திருவள்ளூர் புறவழிச் சாலை (NH716) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கிறது. திருவள்ளூர் பைபாஸ் சாலை முதல் தச்சூர் (NH16). தச்சூர் முதல் எண்ணூர் துறைமுகம் வரை சாலை அமைய உள்ளது.
இதன் மூலம் சிங்கப்பெருமாள் கோயில், காட்டுப்பள்ளி, புதுவயல், பெரியபாளையம், தாமரைப்பாக்கம், திருவள்ளூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய முக்கிய பகுதிகள் இந்த சாலை மூலம் இணைய உள்ளன. அதேபோன்று இந்த சாலை முழுமை அடைந்த பிறகு முக்கிய தேசிய சாலைகளை எளிதாக இணைக்க முடியும். சென்னை தடா தேசிய நெடுஞ்சாலை, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தவிர கிழக்கு கடற்கரை சாலையின் இதன் மூலம் இணைக்கப்பட உள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன? Key Features of Chennai Peripheral Ring Road
இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் சென்னை புறநகர் மிகவும் மேம்படுத்தப்பட்ட சாலையாக இது இருக்கும். 6 வழிச்சாலை எக்ஸ்பிரஸ் சாலையாகவும், மீதமுள்ள நான்கு வழிச்சாலை உள்ளூர் மக்கள் பயன்படுத்தக்கூடிய, சர்வீஸ் சாலையாக உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த எளிதாக இருக்கும்.
இந்த சாலை மூலம் சென்னை புறநகர் பகுதியில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் தொழிற்சாலைகளுக்கு, பொருட்களை ஏற்றி செல்லவும் தொழிற்சாலையில் இருந்து பொருட்களைக் கொண்டு வரவும் எளிதாக இருக்கும். இதன் மூலம் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை பெரும்.
திருவள்ளூர் புறவழிச் சாலை - ஸ்ரீபெரும்புதூர் வரை
இந்த சாலை அமைக்கும் பணிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. சாலையின் மூன்றாவது பகுதியான திருவள்ளூர் புறவழி சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை முப்பது கிலோ மீட்டர் நீளத்திற்கு, 2689 கோடி மதிப்பீட்டில் எல்லைச்சாலையின் மூன்றாவது பகுதி அமைய உள்ளது. இதற்கான துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த பணிகள் அடுத்த 10 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.