செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த மகிழுந்து உற்பத்தி செய்யும், சென்னை ஃபோர்டு தொழிற்சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதாகக்கூறி, தொழிற்சாலையை வரும் ஜூன் மாதத்துடன் நிரந்தரமாக மூடப்போவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளதால், அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர்.



நோ எலக்ட்ரிக் வாகனங்கள்


இந்நிலையில் கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொழிலாளர்கள் தங்களுடைய தொழிற்சாலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்படுகிறதா, என உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் இந்த போராட்டத்தை தொடர்ந்து, சென்னை தொழிற்சாலையில் அதுபோன்ற எந்த திட்டமும் இல்லை என நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.




எழுதிக் கொடுத்துவிட்டு நுழையுங்கள்


திடீரென நிர்வாகம் சார்பில் இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என கடந்த மாதம் இறுதியில் எழுதி வாங்குவதற்காக நிர்வாகம் முயற்சி செய்ததிலிருந்து.  தொழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக அரசு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை, குஜராத்தில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையும் மூடுவதாக அறிவிப்பு செய்த சூழ்நிலையில் , குஜராத் அரசு டாடா நிர்வாத்திற்கு கைமாற்றி கொடுத்த வகையில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளது.






32-வது நாளாக நீடிக்கும் போராட்டம்


அதே போல தங்களுடைய வாழ்வாதாரத்தையும் தமிழக அரசு விவகாரத்தில் தலையிட்டு காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 32-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, தமிழக அரசும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊழியர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதுவரை காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தில், நான்கு முறை ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் ஆகியோரிடம் தொழிலாளர் நலத்துறை சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து. அதேபோல போராட்டத்தில் ஈடுபட்டும் ஊழியர்களை அச்சுறுத்தும் விதமாக நிர்வாகம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டை ஊழியர்கள் முன்வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தொழிற்சாலை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




என்னதான் ஆனது ஃபோர்டு நிறுவனத்திற்கு?


அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.