ஜூன் 30 மூடப்படுகிறது

 

மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை ஜூன் 30-ஆம் தேதியோடு மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஃபோர்டு நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்துவரும் நிரந்தர தொழிலாளர்கள் 2,650 பேர் ஆரம்பத்தில் பணி பாதுகாப்பு கேட்ட நிலையில் மறைமலைநகர் தொழிற்சாலை செயல்படாது என நிர்வாகம் வாய்மொழியில் கூறியுள்ளதன் காரணமாக ஊக்கத்தொகை ஓய்வூதியம் உள்ளிட்டவை பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.



 

35 முறை பேச்சுவார்த்தை

 

கடந்த ஒரு வருடமாக நிரந்தர தொழிலாளர் சங்கத்துடன் போர்டு நிர்வாகம் 35 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் ஊக்கத்தொகை ஓய்வூதியம் தருவதற்கு நிர்வாகம் மறுத்துள்ள நிலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொழிற்சாலை மூடப்படுவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் பணி செய்ய வரும் தொழிலாளர்களிடம் நாங்கள் போராட மாட்டோம் என கையொப்பம் பெற நிர்வாகம் முயற்சி செய்வதாக கூறி நேற்று காலை பணிக்கு வந்த 1300-க்கும் மேற்பட்டோர் மறைமலைநகரில் உள்ள ஒரு தொழிற்சாலையின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



 

நள்ளிரவில்  போராட்டம்

 

இதனைத் தொடர்ந்து மதிய பணிக்கு வந்த ஊழியர்கள் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் வெளியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கூட்டத்திற்கு உள்ளே அனுப்பாத நிலையில் வெளியே இருந்து நள்ளிரவு வரை போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விடியற்காலை வரை போராட்டம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஊழியர்கள் தங்களுக்கு முறையாக நியாயமாக கிடைக்கவேண்டிய பலன்கள் கிடைக்க வேண்டும் எனக்கூறி நள்ளிரவில் வெளியில் படுத்து உறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போராட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாக தொழிலாளிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்

 



 

என்னதான் ஆனது ஃபோர்டு நிறுவனத்திற்கு

 

 

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 



 

எனவே, இந்தியாவில் உள்ள இரு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. சென்னையில் மறைமலை நகர் மற்றும் குஜராத்தின் சனந்த் பகுதிகளில் அந்நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.ஃபோர்டு தொழிற்சாலையை நம்பியுள்ள 4 ஆயிரம் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுக தொழிலாளர்களுக்கும் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

குஜராத்துக்கு டாடா  தமிழகத்திற்கு "டாடா"

 

இவ்விவகாரத்தில் ஊழியர்களின் பணி பாதுகாப்பு குறித்த தொழிற்சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளை ஏற்க ஃபோர்டு நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால் அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது ஃபோர்டு நிறுவனமறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில், ECOSPORTS, எண்டவர்'. 'ஃபிகோ' மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.

 

இதுவரை பெற்ற ஆர்டர்களில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்ய வேண்டி இருப்பதால், வருகின்ற ஜூன் மாதம் வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக தொழிற்சாலையை இதுவரை யாரும் வாங்க முன் வராத நிலையில், குஜராத்தில் உள்ள முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் வாங்குவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில்தான் சென்னையில் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.