சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடி செலவில் உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு பூங்கா"வை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (7.10.2024) சென்னை, கதீட்ரல் சாலையில் தோட்டக்கலைத் துறையின் 6.09 ஏக்கர் நிலத்தில், 46 கோடி ரூபாய் செலவில் தோட்டக்கலை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரத்திலான கலைஞர் நூற்றாண்டு பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

 

கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் சிறப்பம்சங்கள் என்ன?

 

இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய இப்பூங்காவின் நுழைவாயில் அருகில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனிமூட்டப் பாதை, 2600 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்க்கிட் குடில், அரிய வகை மற்றும் கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10.000 சதுர அடிப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளை கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சிற்றுண்டியகம், சூரியகாந்தி கூழாங்கல் பாதை. மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம் பாரம்பரிய காய்கறித்தோட்டம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

 

கட்டணம் விவரம் என்ன?

 

இவற்றுடன் இப்பூங்காவில் உள்ள சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகுபடுத்துகின்றன. இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100/-, சிறியவர்களுக்கு ரூ.50/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250/-, சிறியவர்களுக்கு ரூ.200/-, குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150/- சிறியவர்களுக்கு ரூ.75/- மற்றும் மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு ரூ.50/-, கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு ரூ.40/- என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50/- எனவும். புகைப்பட கருவிகளுக்கு (Camera) ரூ.100/- எனவும், ஒளிப்பதிவு கருவிகளுக்கு (Video Camera) 5.5000/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நுழைவுக் கட்டணங்கள் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே செல்லதக்கது.

 

இப்பூங்காவிற்கான நுழைவுச் சீட்டினையும், நுழைவுகட்டணம் குறித்தான தகவல்களையும் https://tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளத்தில் வாயிலாக பெறலாம். மேலும், விரைவுத்தகவல் குறியீடு மூலமும் நுழைவுச் சீட்டினை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.