செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோவில் தெருவை  சேர்ந்தவர் ஆண்டனி. இவரது மனைவி ஜெயஸ்ரீ(32). இவர் மகேந்திரா சிட்டியில் உள்ள வாகனங்கள் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆலன் (15) என்ற மகன் உள்ளார். 


இவர் அஞ்சூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், இன்று அதே பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு  மின் கட்டணம் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த இருசக்கர வாகனத்தை ஆலன் ஓட்டி வந்துள்ளார்.


தொடர்ந்து மின் கட்டணம் செலுத்தி விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது  சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஒரகடம் சாலை சந்திப்பில் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது திருவண்ணாமலையில் இருந்து அடையாறு நோக்கி சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜெயஸ்ரீ, ஆலன் இருவரும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


அப்போது பணியில் இருந்த மறைமலைநகர் போக்குவரத்து போலீசார் இருவரின் உடலையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து குறித்து  வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை சேகரித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரசு பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எப்போதுமே பரபரப்பாக காணப்படும் சிங்கப்பெருமாள் கோயில் ஒரகடம் சாலை சந்திப்பில் சிக்னல்கள் முறையாக வேலை செய்யாததாலும், போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என சக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.