சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை, துபாய், குவைத், சார்ஜா, அபுதாபி, ஓமன், கத்தார், சவுதி அரேபியா, லண்டன், பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 51 புறப்பாடு விமானங்களும், அதைப்போல் அந்த நாடுகளில் இருந்து 51 வருகை விமானங்களும், மொத்தம் 102 விமானங்கள், இந்தப் புதிய முனையத்தில் இன்று இயங்கத் தொடங்கியுள்ளன. இப்போது செயல்பாட்டில் இருந்த பழைய முனையமான டெர்மினல் 3, வரும் பத்தாம் தேதிக்கு பின்பு முழுமையாக மூடப்படுகிறது.  விமான நிலைய அதிகாரிகள் தகவல்.

 

சென்னை ( Chennai Airport )  : மீனம்பாக்கத்தில், ஒருங்கிணைந்த சர்வதேச புதிய விமானம் முனையம், முதல் ஃபேஸ் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி திறந்து வைத்தார். ஏற்கனவே உள்ள சென்னை விமான நிலையத்தில், ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர். இனிமேல் 30 மில்லியன் பயணிகள், பயணிப்பதற்கான வசதிகள், இந்தப் புதிய முனையத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த முனையம் அதிநவீன புதிய தொழில்நுட்பத்துடன், பயணிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள், சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

 

முதல் சோதனை ஓட்டம், 

 

இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில், முதல் சோதனை ஓட்டம், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி தொடங்கியது.அதன் பின்பு மே மாதம் 3 ஆம் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. முதலில்  சிறிய ரக விமானங்களான ஏர் பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737,738 விமானங்கள் மட்டுமே, சோதனை அடிப்படையில் புதிய ஒருங்கிணைந்த முனையம் வந்து சென்றன. பகலில் மட்டும் நடந்த சோதனை ஓட்டம் அதன் பின்பு இரவு அதிகாலை நேரங்களிலும் நடந்தது. மே மாதம் இறுதிக்குள், புதிய முனையத்தில் சோதனை ஓட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்துவிடும். அதன் பின்பு ஜூன் முதல் வாரத்தில் இருந்து, புதிய  ஒருங்கிணைந்த சர்வதேச விமானமுனையத்தில், முழு அளவிலான, வழக்கமான சர்வதேச வருகை, புறப்பாடு  விமானங்கள் அனைத்தும் இயக்கப்படும்  என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

 

சில பிரச்சனைகள் 

 

ஆனால் விமானங்கள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தபோது, சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டன. பயணிகளின் முழு பாதுகாப்பு நலன் கருதி, அந்தப் பிரச்சனைகளை  சரி செய்து, தொடர்ந்து சோதனை ஓட்டம் நடந்து வந்தது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி, ஜூன் முதல் வாரத்தில், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்திலிருந்து, முழு அளவில் விமானங்கள் இயக்கப்படவில்லை. புதிய முனையத்தில் தொடர்ந்து சிறிய மற்றும் நடுத்தர ரக விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதியில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் அனைத்து சர்வதேச விமானங்களும், இந்த புதிய முனையத்தில் வருகை, புறப்பாடு விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், அடுத்தபடியாக மேலும் சில விமானங்களும், புதிய சர்வதேச ஒருங்கிணைந்த முனையத்தில் இயக்கப்பட்டு வந்தன.

 

புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம்

 

இந்த நிலையில்  ஜூன் 26 முதல் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின்  அனைத்து சர்வதேச விமானங்களும், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையமான டெர்மினல் 2 எனப்படும் (டி 2) முணையத்தில் இருந்து இயங்கத் தொடங்கியது. இதனால் சிங்கப்பூர், மலேசியா,துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோகா, தமாம், அபுதாபி,இலங்கை உள்ளிட்ட  நாடுகளுக்கு இயக்கப்படும் புறப்பாடு, வருகை விமானங்கள்,புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில் இயங்கத் தொடங்கியுன.

 

இந்த நிலையில்  பெரிய ரக விமானங்களான பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர் ஃபிரான்ஸ் ஏர்லைன்ஸ்,லுப்தான்ஷா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ், எத்தியாட் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ், கல்ப் ஏர்வேஸ், தாய் ஏர்வேஸ், ஏர் ஏசியா ஏர்லைன்ஸ்  உள்ளிட்ட பெரிய ரக விமானங்கள் வருகை, புறப்பாடுகள் படிப்படியாக, புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில் இருந்து இயங்கத் தொடங்கின.

 

51 வெளிநாட்டு விமானங்கள்

 

இந்த நிலையில் நேற்று அதிகாலை 00:01 மணியில் இருந்து, அனைத்து சர்வதேச விமானங்களும், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, வருகை புறப்பாடு விமானங்கள் இயங்க  தொடங்கிவிட்டன. இதை அடுத்து சென்னை மீனம்பாக்கம் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையம், இன்றிலிருந்து நூறு சதவிதம் முழுமையாக இயங்கத் தொடங்கி விட்டன. இந்த புதிய முனையத்தில் இன்று 51 வெளிநாட்டு விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன. அதைப்போல் 51 வெளிநாட்டு விமானங்கள், புதிய முனையத்திற்கு இன்று வருகின்றன. இன்று ஒரே நாளில் 102 விமான சேவைகள் புதிய முனையத்தில் இயக்கப்படுகின்றன.

 

முழுமையாக மூடப்படுகிறது

 

இதை அடுத்து ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த பழைய சர்வதேச முனையமான டெர்மினல் 3 எனப்படும் (டி 3), வருகின்ற 10 தேதிக்கு பின்பு  முழுமையாக மூடப்படுகிறது. அதன் பின்பு அந்தப் பழைய முனையத்தில் விமான சேவை எதுவும் நடைபெறாது. அதோடு அடுத்த ஒரு சில வாரங்களில்  பழைய முனையமான டி3, இடிக்கும்  பணிகள் தொடங்க இருக்கிறது. அது முழுமையாக இடிக்கப்பட்ட பின்பு, சென்னை ஒருங்கிணைந்த சர்வதேச விமானமுனையத்தின் ஃபேஸ் 2, கட்டடப் பணிகள் தொடங்க இருக்கிறது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.