DMK A Raja on hindu comment : இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக  ராசா மீது வழக்குப்பதிய கோரி ஜோசப் என்பவர் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 


இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் திமுக துணைப் பொதுச் செயலாளர் ராசா மீது வழக்குப்பதிய கோரி ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார். இந்த மனு இன்று  (அக்டோபர்,17) விசாரணைக்கு வந்தது. அப்போது,  இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து பேசியதாக திமுக எம்.பி.  ஆ.ராசா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முகாந்திராம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில்  காவல்துறை தெரிவித்தது.


கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்து மதம் மற்றும் இந்து பெண்கள் குறித்து பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் அமைப்புகள் சில கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. 


இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர், “ மத்திய முன்னாள் அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி , மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும், ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும்” குறிப்பிட்டிருந்தார். 


மேலும், வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து  பேசி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ராசா மீதான புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை என காவல் துறை மீது  குற்றம்சாட்டினார். எனவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். 


இந்த மனு இன்று (அக்டோபர்,17)  நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ஜோசப்பின் புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி ராசா மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என அறிக்கை அளித்ததாக கூறினார். 


இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆ. ராசா மீது வழக்கு பதிய முடியாது எனவும், இந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் கூறினார். மேலும், மனுதாரர் வேண்டுமானால் கீழமை நீதிமன்றத்தை அணுக அனுமதி அளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.