தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் காலை அசானி புயலாக உருவெடுத்தது. இந்த அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்டல் பகுதியில் நேற்று முன்தினம் தீவிரம் அடைந்தது.


இந்த அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று வட ஆந்திரா, ஒடிசாவை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதன் அருகில் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும். இந்த புயல் 48 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.




இதன் காரணமாக, இன்று முதல் 13-ந் தேதி வரை தமிழ்நாட்டிலும், புதுவையிலும் மழை பெய்யக்கூடும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருந்தது. இதன் காரணமாக, சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. அதிகாலையில் சில மணி நேரம் இடைவெளி விட்ட மழை காலை 7 மணியளவில் கனமழையாக பெய்தது,


இதனால், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், ஆலந்தூர், பாரிமுனை, விருகம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், தி.நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, ராயபுரம், கே.கே.நகர், எழும்பூர், தி.நகர், பாலவாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. சென்னையில் பெய்து வரும் இந்த மழையால் வாகன ஓட்டிகள், காலையில் பணிக்கு செல்வோர் சற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.




சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதுதவிர தமிழ்நாட்டின் பிற பகுதிகளான நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அசானி புயல் காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றிக ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. அவ்வப்போது 90 கி.மீ. வேகத்திலும் காற்று வீசி வருகிறது.


வடக்கு ஆந்திர கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய ஒடிசா கடற்கரை பகுதிகளிலும் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.