பத்திரப்பதிவு - வழிகாட்டுதல் மதிப்பு

Continues below advertisement

தமிழகத்தில் சொத்து பத்திரங்களை பதிவு செய்யும் பணிகள் 587 சார் - பதிவாளர் அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. தாக்கல் செய்யப்படும் பத்திரங்களில் நிலத்தின் மதிப்பானது அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்புக்கு இணையாக இருக்க வேண்டும். அந்த நிலத்தில் கட்டடம் இருந்தால் , அதற்கான மதிப்பையும் சரியாக குறிப்பிட வேண்டும். பொதுப்பணி துறையின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு , இந்த மதிப்பு சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட கட்டடம் எப்போது கட்டப்பட்டது. எந்த வகை பொருட்களால் கட்டப்பட்டது என்ற அடிப்படையில் , அதன் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் சொத்து வாங்கியவர்களுக்கு இந்த வழிமுறைகள் தெரியாது. விற்பனைக்கு வரும் சொத்தில் உள்ள கட்டடத்தின் மதிப்பானது , அது கட்டப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் கருத்தில் கொள்ளப்படும். தற்போதைய நிலையில் , எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன என்று பார்த்து அதற்கேற்ப மதிப்பு கழிக்கப்படும். 

Continues below advertisement

தவறான தொகை - வேறுபாட்டு தொகை வசூல்

பத்திரங்களில் குறிப்பிடப்படும் கட்டடத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் வரை இருந்தால் அதை சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்களே கள ஆய்வு வாயிலாக உறுதி செய்யலாம். இதில் தவறான மதிப்பு குறிப்பிடப்பட்டது தெரிய வந்தால் வேறுபாட்டு தொகை வசூலிக்கப்படும்.

பத்திர எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை உள்ளிட்ட பகுதிகளில், வீடுகள் விலை வெகுவாக அதிகரித்துள்ளதால் , கட்டட கள ஆய்வு செய்ய வேண்டிய பத்திரங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உதாரணமாக , ஒரு அலுவலகத்தில் நாளில், 100 பத்திரங்கள் ஒரு வந்தால், அதில் , 50 - க்கும் மேற்பட்ட பத்திரங்கள், கட்டட கள ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன.

சார் - பதிவாளர்கள், தங்கள் வழக்கமான பதிவு பணிகளுக்கு இடையே , கட்டட கள ஆய்வுக்கு நேரில் செல்ல வேண்டி உள்ளது. இதில், வேலைப்பளு அதிகமாக உள்ளதாக கூறி, பெரும்பாலான சார் பதிவாளர்கள், பத்திரங்களை நிலுவையில் வைக்கின்றனர்.

இதனால், வீடு வாங்கி யோர் பதிவு முடிந்தாலும், பத்திரம் பெற ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்க கள ஆய்வு பணியில் , உரிமம் பெற்ற மதிப்பீட்டாளர்கள் அல்லது பொறியாளர்களை பயன்படுத்த பதிவுத் துறை முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பதிவுத்துறை அதிகாரி கூறியதாவது ; 

மாநகராட்சி , நகராட்சி பகுதிகளில் , அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் அதிகரித்துள்ளன. இதில், கட்டடத்தின் மதிப்பு தொடர்பாக பத்திரத்தில் குறிப்பிடும் மதிப்பு , பொதுப்பணி துறை தள மதிப்பு பட்டியலுடன் பொருந்தும் நிலையில் இருந்தால் , அதை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். பொதுப்பணித்துறை மதிப்புக்கும், பத்திரத்தில் உள்ள மதிப்புக்கும் வேறுபாடு உள்ள பத்திரங்களை மட்டும் கவனமாக ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருக்கிறோம்.

ஆனால் , சார் - பதிவாளர்கள் அனைத்து பத்திரங்களையும் இதைக் காரணமாக கூறி , தாமதம் செய்வதாக தெரிய வந்துள்ளது. உரிய காரணம் இல்லாமல் , பத்திரங்களை கிடப்பில் போடும் சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என இவ்வாறு அவர் கூறினார்.