chennai crime: சென்னையில் 15 வயது சிறுவனை 30 வயது பெண் காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


15 வயது சிறுவனை காதலித்த 30 வயது பெண்:


தகாத உறவு, அதனால் ஏற்படும் குடும்ப வன்முறை மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அண்மை காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆசை வார்த்தைகளை கூறி ஆண்கள் பெண்களையும் , பெண்கள் ஆண்களையும் ஏமாற்றுவதும் அதில் விளக்கல்ல. அந்த வகையில் சென்னையில் தன்னுடன் பணியாற்றிய 15 வயது சிறுவனை 30 வயது பெண் காதலித்து திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் அளித்த புகாரால் தற்போது அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


காதல் வலையில் விழுந்த சிறுவன்:


சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த திருமணம் ஆகாத 30 வயது இளம்பெண் ஒருவர், அதே பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.  இதனிடையே, குடும்பத்தின் மோசமான பொருளாதார சூழல் காரணமாக,  15 வயதான சிறுவன் ஒருவனும் அந்த கடையில் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றி வந்தான். அப்போது ஒரே கடை ஊழியர்கள் என்ற விதத்தில், அந்த பெண்ணும் சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்கள் நெருங்கிப் பழக தொடங்கியுள்ளனர். சிறுவன் அந்த இளம்பெண்ணை அக்காள் என்று அழைத்ததாலும், வயது வித்தியாசம் அதிகம் இருந்ததாலும், சக பணியாளர்கள் யாருக்கும் அவர்கள் மீது எந்த சந்தேகமும் ஏற்படாமல் இருந்துள்ளது. இதற்கிடையில் இளம்பெண்ணுக்கு சிறுவனுக்கும் இடையேயான பழக்கம், காதலாக மாறியுள்ளது.


சிறுவனுடன் ரகசிய திருமணம்?


இருவரும் பரஸ்பரம் காதலிப்பதாக கூறிக்கொள்ள,  அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். பல்வேறு பகுதிகளுக்கு சென்று இருவரும் உல்லாசமாக சுற்றியதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் தான் இளம்பெண்ணும், சிறுவனும் நெருக்கமாக பழகும் விதம்,  அவர்களுடன் வேலை செய்யும் சக ஊழியர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி சிறுவனின் பெற்றோரிடம் அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் மகனை கண்டித்தபோது, அந்த பெண் தனக்கு அக்கா போன்றவர் என திட்டவட்டமாக தெரிவித்துள்ள பிரச்னையை சமாளிக்க முயன்றுள்ளான்.


ஊரை விட்டு ஓட முயற்சி:


சிறுவன் கூறியதை நம்பமுடியாமல் பெற்றோர், மகனை ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர். அப்போது இளம்பெண்ணும், சிறுவனும் காதலித்து வருவது உண்மை தான் என தெரியவந்தது. தங்கள் காதல் விவகாரம் அரசல் புரசலாக மற்றவர்களுக்கு தெரியவந்ததால் இளம்பெண், சிறுவனை அழைத்துக்கொண்டு வெளியூர் தப்பிச்செல்ல முடிவு செய்தார். அதன்படி இளம்பெண், சிறுவனுடன் வௌியூர் செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடைந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த சிறுவனின் பெற்றோர், உடனடியாக கிளாம்பாக்கம் சென்று, மகனை மீட்டனர். சிறுவனின் பெற்றோரை கண்டதும், இளம்பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


இது குறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனை கடத்த முயன்றதாக குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் விசாரணை நடத்த உள்ளனர்.