இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் என சென்னை மாநகர ஆணையராக பதவியேற்றுள்ள அருண், தனது முதல் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரத்திற்கு புதிய ஆணையர்:
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கட்சியின் மாநில தலைவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தி.மு.க. அரசு மீது கடும் விமர்சனங்களை உண்டாக்கியது. இந்த சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் உட்பட பலரும் தமிழ்நாட்டின் சட்ட - ஒழுங்கு குறித்து விமர்சனம் வைத்தனர்.
இந்த நிலையில், தமிழக காவல்துறை மீதும் எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிடம் மாற்றப்பட்டு, சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் பேட்டி:
இந்நிலையில், சென்னை ஆணையராக பதவியேற்ற பின் , முதல் முறையாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது, சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதன்மையான பணியாகும். நடந்த குற்றங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும், இனி குற்றங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் எனவும் சென்னை மாநகர ஆணையராக பொறுப்பேற்றுள்ள அருண் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசுகையில், பொத்தம் பொதுவாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று சொல்லக் கூடாது. குற்றங்களை கண்டுபிடிக்க , போக்குவரத்து சிக்கல்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். என்னிடம் பொறுப்பை ஒப்படைத்த முதலமைச்சரின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன் எனவும் சென்னை மாநகர ஆணையர் அருண் தெரிவித்தார்.
Also Read: Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?