சென்னை பெரம்பூர் செம்பியம் சபாபதி முதலி தெருவில் சுமார் பத்து குடும்பங்கள் ஒரே கட்டிடத்தில் வசித்து வருகின்றனர். ராஜேஷ், சக்திவேல், ஞானசேகர் ஆகியோருக்கு சொந்தமான இந்த வீட்டில் கீழ்த்தளத்தில் வீட்டு உரிமையாளர்களும் முதல் மாடியில் மூன்று வாடகைதாரர்களும் இரண்டாவது மாடியில் இரண்டு வாடகைதாரர்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இன்று காலை தங்களது பணிகளை முடித்துக் கொண்டு சில பேர் வழக்கம் போல் வேலைக்கு சென்று உள்ளனர். இன்று காலை சுமார் 12 மணி அளவில் கட்டிடத்தின் இரண்டாவது  தளத்தில் உள்ள பால்கனி சுவர் யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென இடிந்து கீழே விழுந்தது.

 



 

இதனால் வீட்டிலிருந்த நபர்கள் அலரி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பியம் போலீசார்  உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  தீயணைப்பு துறையினர்   காயம் அடைந்தவர்கள் மற்றும் மயக்கம் அடைந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காயமடைந்த சுதா, மோகனா, ஜெயலட்சுமி என்ற மூன்று பெண்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக  அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடம் சமீபத்தில் மூன்று மாத காலத்திற்கு முன்னர் தான் புதுப்பிக்கப்பட்டதாகவும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் கட்டிடத்தில் நீர் தேங்கியதால் அந்த ஈரப்பதம் ஆனது கட்டிடத்தின் உள்ளே ஊடுருவி கலவையானது சரிவர இறுக்கமாக பிடிமானம் இல்லாததால் கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்து இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து திரு.வி.க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 



 

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் திடீர் தீ

 

சென்னை கொடுங்கையூர் காந்தி நகர் முதல் தெரு பகுதியில் வாகனங்கள் தீப்பற்றி எரிவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வந்து விசாரணை செய்த போது ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு கார் தீயில்  எரிந்து நாசமாகி இருந்தது. போலீசாரின் விசாரணையில் கொடுங்கையூர் காந்தி நகர் முதல் தெருவை சேர்ந்த பாஸ்கர் (47) இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்து வருகிறார்.

 


 

இவர் இரவில் வழக்கம் போல வீட்டின் வெளியே தனது காரை விட்டு சென்றுள்ளார். இதே போல அதே பகுதியில் குடியிருக்கும் மற்றொரு நபரும் இருசக்கர வாகனத்தை காரின் அருகில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். திடீரென கார் மற்றும் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து பாஸ்கருக்கு தகவல் தெரிவித்தனர். 



 

வீட்டிலிருந்து இறங்கி வந்த பாஸ்கர் மற்றும் அருகிலிருந்தவர்கள் சேர்ந்து தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் இருசக்கர வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது காரின் முன்பகுதி முழுவதும் தீயில் கருகி நாசம் ஆயின தற்போது மழை பெய்து அனைத்துப் பகுதிகளும் ஈரமாக இருப்பதால் தீ விபத்துக்கான காரணம் நாச வேலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.