மல்டி லெவல் கார் பார்க்கிங் 

 

சென்னை விமான நிலையத்தில் ஆறு அடுக்கு, நவீன வாகன நிறுத்தம் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதியில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங், சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் கிழக்கு, மேற்கு என்று இரு பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த கார் நிறுத்தங்களில் 2,150 கார்கள், 400 இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.



 

எவ்வளவு நேரம்..

 

சென்னை விமான நிலையத்தின் வளாகத்துக்குள் நுழையும் இடத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டு, உள்ளே வரும் கார்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, டோக்கன் கொடுக்கும் முறை கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்தது. அந்த டோக்கனில் வாகனத்தின் எண், உள்ளே நுழையும் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். வெளியில் செல்லும்போது, அங்கு அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டில், அந்த டோக்கனை பார்த்து, எவ்வளவு நேரம் வாகனம் விமான நிலையத்திற்குள் நின்றதோ, தகுந்தாற்போல் கட்டணங்களை வசூல் செய்து விட்டு வாகனங்களை அனுப்புவார்கள்.



 

டோக்கன் வாங்க வேண்டியது இல்லை

 

அதே நேரத்தில் இருசக்கர வாகனங்கள், உள்ளே நுழையும் போது டோக்கன் வாங்க வேண்டியது இல்லை. அவர்கள் நேரடியாக உள்ளே சென்று விட்டு பார்க்கிங்கில் நிறுத்திக் கொள்ளலாம். வெளியே செல்லும்போது அப்பகுதியில் நிற்கும் பார்க்கிங் ஊழியர், இருசக்கர வாகனங்களிடம், கட்டணங்களை வசூலித்துக் கொள்வார்கள்.

 

நம்பர்  பிளேட் ஸ்கேன்

 

காவல்துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பத்திரிகையாளர், அரசு துறையினர், விமான நிலைய ஊழியர்கள் போன்றவர்களிடம் கட்டணம் வசூலிக்க மாட்டார்கள். இதுதான் நேற்று வரை சென்னை விமான நிலையத்தில் நடைமுறையில் இருந்தது. ஆனால் இன்று அதிகாலையில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்குள் நுழையும் இருசக்கர வாகனங்கள் அனைத்திற்கும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் டோல்கேட்டில், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு என்று தனியாக அமைக்கப்பட்டுள்ள வழியில் தான் செல்ல வேண்டும். அங்கு பணியில் இருக்கும் டோல்கேட் ஊழியர், இருசக்கர வாகனத்தின் நம்பர்  பிளேடட்டை ஸ்கேன் செய்து, டோக்கன் கொடுக்கிறார். அதன் பின்பு தான் இரு சக்கர வாகனம் உள்ளே செல்ல முடியும். 



 

தகுந்தாற் போல் பார்க்கிங் கட்டணம்

 

இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், தங்கள் பணிகள் முடிந்து, விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வழியில், டோல்கேட்  ஊழியர்கள், இருசக்கர வாகனங்கள் எவ்வளவு நேரம் உள்ளே நிறுத்தப்பட்டதோ, அதற்கு தகுந்தாற் போல் பார்க்கிங் கட்டணம் வசூலித்து விட்டு அனுப்புகின்றனர். முதல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.20ல் தொடங்கி, 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரையில் ரூ. 90 வரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இதில் காவல்துறை, மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர், விமான நிலைய ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், அரசு துறையை சார்ந்தவர்கள் யாருக்கும் விதிவிலக்கு இல்லை. அனைவருக்குமே  கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் உள்ளே நுழையும்போது கொடுக்கும் டோக்கனை தவற  விட்டவர்களுக்கு, வெளியேறும் போது, ரூ. 150 அபராதமாகவும் வசூலிக்கப்படுகிறது.



 

தனியார் ஒப்பந்ததாரர்

 

இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகளை கேட்டதற்கு, பார்க்கிங் பகுதி பராமரிப்பு நிர்வாகத்தை தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்து விட்டோம். அவர்களிடம் ஒப்படைக்கும்போது, பார்க்கிங் கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்பதையும் வரையறை செய்து கொடுத்திருக்கிறோம். அதில் இருசக்கர வாகனங்களுக்கும் பார்க்கிங் கட்டணம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதில் குறிப்பிடப்பட்ட பார்க்கின் கட்டணத்துக்கு அதிகமாக கட்டணம் வசூலித்தால் மட்டுமே நாங்கள் தலையிட முடியும். ஒரு சில இருசக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதிலிருந்து விதிவிலக்கு கொடுப்பது பற்றி, அந்த ஒப்பந்த நிறுவனம்தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் அதில் தலையிட முடியாது என்று கூறுகின்றனர்.



 

பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் டோல்கேட் ஊழியர்கள் தரப்பில், இன்று அதிகாலையில் இருந்து அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும்படியும், விமான நிலையத்துக்குள் நுழையும்போதே டோக்கன் கொடுக்கும் படியும், எங்களுக்கு எங்களுடைய அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். அதை தான் நாங்கள் செயல்படுத்துகிறோம்” என்று கூறுகின்றனர்