சென்னையின் முக்கிய போக்குவரத்துக்காக மின்சார ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கும் போக்குவரத்தாகவும், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்வதற்கும் ரயில் போக்குவரத்து மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. 


சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழிப்பாதை Chennai Beach To Chengalpattu 


சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில் வழித்தடம், மிகவும் முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள், இந்த வழித்தடத்தில் பயணம் செய்து வருகின்றனர். 


பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய வழித்தடமாக இந்த வழித்தடம் இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான, மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 


பொதுமக்கள் எதிர்பார்ப்பு 


இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில், இதுபோன்ற மின்சார ரயில்கள் செல்லும் வழித்தடத்தில், ஏசி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று சென்னையிலும் ஏசி இரவில் இயக்க வேண்டும் என கோரிக்கையில் எழுந்தது.


சென்னை ஏசி ரயில் - Chennai Local AC Train 


சென்னை ஐ.சி.எப். ஆலையில் ரயில்வே துறை சார்பில், குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில்களும் இங்கு தயாரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்துக்கு குளிர்சாதன மின்சார ரயில் தயாரிக்கப்பட்டது.


சென்னை ஏசி ரயில் சிறப்பம்சங்கள் என்ன ? Chennai AC Local Train Key Features 


பயன்பாட்டிற்கு வரவுள்ள சென்னை ஏ.சி ரயிலில், 12 பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கும். இந்த ரயில் வண்டியில் 1,320 இருக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்த ரயிலில் 5,500 பேர் பயணம் செய்வதற்கான இடவசதி உள்ளது. அதேபோன்று தானியங்கி கதவுகள் அமைக்கப்பட உள்ளன. ஏ.சி ரயிலில் படியில் பயணம் செய்வது தவிர்க்கப்படும் . 


இதேபோன்று ரயில் பயணத்தின்போது குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அவசர காலங்களில் நேரடியாக ரயில் ஓட்டுநரிடம் தொடர்பு கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது


ரயில் அட்டவணை - Ac Train Timing


சென்னை ஏ.சி ரயில்கள் அட்டவணை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டிற்கு, காலை 7 மணி, பகல் 3.45 மணி, இரவு 7.50 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதேபோன்று, செங்கல்பட்டில் இருந்து காலை 9.00 மணி, மாலை 5.45க்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் என்றும் தெரிகிறது. அதேபோன்று தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


செயல்பாட்டிற்கு வருவது எப்போது ?


செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை, ஒரு சில ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாம்பரம் முதல் சென்னை கடற்கரை இடையே, அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ஏசி ரயில்கள் நின்று செல்லும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.


அனைத்து சனிக்கிழமைகளையும் ரயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் இறுதிக்குள், ரயில் இயக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.