செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், சோத்துபாக்கம் மேல்மருவத்தூர், கீழ் மருவத்தூர், கேசவராயப்பேட்டை, பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வார கோரியும், நீர்நிலை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த நான்கு கிராமங்களில் உள்ள ஏரிகள் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் வருவாய்த்துறையினர், அளவடி செய்தனர். அளவில் செய்து நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள  குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



 

இதுகுறித்து அப்பொழுது காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த பொழுது மாவட்ட ஆட்சியர் பொன்னையா சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள்  உள்ளது என நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார். அவ்வாறு குறிப்பிடப்பட்ட ஆய்வில், இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நபர்களின் குறித்த விவரங்கள் சரியாக தெரிவிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து ராஜா என்பவர் மீண்டும் வழக்குத் தொடுத்து முழு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 



 

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டுவந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நெடுங்காலமாக மக்களுக்கு நீராதாரமாக இருந்து வந்த  ஏரி தற்போது கல்யாண மண்டபம், உணவு விடுதிகள், பேருந்து நிலையம், கார் பார்க்கிங் என முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

 

மேலும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கடந்த 2015ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஆக்கிரமிப்பு இடத்தில்தான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் தரப்பிலும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் கொடுத்த புகார் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  அறிக்கை தாக்கல் செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



 

இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறையினருடன் இணைந்து மேல்மருவத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வதற்கு தேவையான கனரக வாகனங்கள் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை அகற்ற இன்று வருவாய் துறையினர் முடிவு செய்து இருந்தனர். அடுத்த மூன்று, நான்கு நாட்களில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து எச்சரிக்கை கொடுத்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.



 

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாதரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, மேல்மருவத்தூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகள் குறித்து, நோட்டீஸ் அனைத்தும் தயாராக உள்ளது. ஆக்கிரமிப்புப் பகுதிகளை அவர்களாகவே அகற்றுவதாக தெரிவித்ததால், நேரம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.



 

இது குறித்து ராஜா கூறுகையில், இன்னும் இரண்டு நாட்களில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வருகின்ற அமர்வில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தரப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு பகுதிகளான திருமண மண்டபம் உள்ளிட்டவை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை, மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொதுநல வழக்கு தொடர்ந்த ராஜாவின் மேலாளர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.