செங்கல்பட்டு மாவட்டம்  அச்சரப்பாக்கம் அடுத்துள்ள மதூர்  இருளர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பெயர் சாந்தி இவர்களுக்கு, 4 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளன. மேலும் 17 நாட்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு,  திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகின்றன. வேலை கிடைப்பதை பொறுத்து ஒவ்வொரு ஊருக்கும், புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.



 

 

கொத்தடிமை தம்பதிகள்

 

இந்த நிலையில் கடந்த ஆறு மாத காலமாக, அரியலூர் மாவட்டத்தில் கரும்பு தோட்டத்தில், கொத்தடிமையாக தம்பதிகள் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.  இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் முயற்சியால் மீட்கப்பட்ட இருவரும், கடந்த 18 ஆம் தேதி முதல் உறவினர்களுடன், மதூர் கிராமத்தில் குடும்பத்தோடு தங்கி இருந்துள்ளனர்.  இந்த நிலையில் அதற்கு அடுத்த நாள் மதியம் ஒரு மணி அளவில், கிராம அரசு செவிலியர் பவுனாத்தாள் என்பவர் ரவி மற்றும் அவர்கள் குடும்பத்திடம் வந்து , ' நீ இந்த ஊரை சார்ந்தவர் இல்லை , உன்னிடம் எந்தவித அரசு அடையாள அட்டையும், இல்லை ' உன் குழந்தைக்கு சம்பந்தமான பதிவுகள் , எதுவும் இல்லை, 'மருத்துவமனையில் என்னிடமோ எதுவும் இல்லை எனவே ஊரை விட்டு கிளம்பி விடு ', என மிரட்டியதாக கூறப்படுகிறது.



 

மலை குன்றி தஞ்சம்

 

பிறந்து 14 நாட்கள் மட்டுமான கைக்குழந்தை வைத்துக்கொண்டு, நான் எங்கே செல்வது என ரவி புலம்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த கிராமத்தை விட்டு சென்று விடுகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் , 21- ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் அவர்கள் தங்கி இருந்த இருளர் காலனிக்கு வந்த கிராம அரசு செவிலியர் பவுனாத்தாள், மீண்டும் என் ஊரை விட்டு காலி செய்யவில்லை என மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அப்பொழுது,  வெள்ளை பேப்பரில் ரவி மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோரிடம் கைரேகை வாங்கியுள்ளனர்.



 

இதனை அடுத்து, அங்கிருந்து கிளம்பி அருகாமையில் உள்ள சியாளம் கிராமத்தில், உள்ள மலை குன்றி தஞ்சம் அடைந்துள்ளனர். பாம்புகள் மற்றும் வனவிலங்கு அச்சுறுத்தலுக்கு, நடுவே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் ரவி , இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சென்று மனு அளித்து தங்கள் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், "வட்டாட்சியர் வாகனத்திலேயே குடும்பத்தை அனுப்பி வைத்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

 

உடனடியாக நடவடிக்கை 

 

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவிக்கையில்,  'உடனடியாக இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட அரசு செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், அடையாள அட்டை இல்லாமல், தவித்து வரும் குடும்பத்திற்கு உடனடியாக அடையாள அட்டை கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.