சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில், குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னையில் எந்தெந்த இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.?

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும், இறக்குமதி செலவை குறைக்கும் வகையிலும், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, சென்னையில் நீலாங்கரை, அடையாறு, திருவான்மியூர், சேப்பாக்கம், ராயபுரம், பாரிமுனை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

திட்டத்தை செயல்படுத்தும் டோரண்ட் கேஸ் நிறுவனம்

இந்த திட்டத்தை, 48 கோடி ரூபாய் மதிப்பில், டோரண்ட் கேஸ்(TORRENT GAS) நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இதற்காக, 466 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. அதில், 260 கிலோ மீட்டர் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய பகுதிகளில் வருகிறது. இந்நிலையில், டோரண்ட் கேஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.