19 வயது மாணவி பாத்திமா லத்தீப் மரண வழக்கில் சிபிஐ தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தற்கொலை என்று இறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டை விட்டு தூரமாக வந்த காரணத்தால் ஏற்பட்ட மனவுளைச்சலால் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று சிபிஐ கூறியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி ஐஐடி வளாகத்தில் அவரது அறையில் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு பதிவானது. பாத்திமாவின் இறப்புக்கு ஒரு பேராசிரியர் கொடுத்த அழுத்தம் காரணம் என அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர். அதேநேரம், இந்த வழக்கை முறையாக விசாரிக்கவேண்டும் என பாத்திமா லத்தீப்பின் பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.


பல்வேறு மாணவர் அமைப்புகள், அரசியல்கட்சியினர், பாத்திமாவின் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோர் அவரது மரணத்திற்கு உரிய நீதி வேண்டும் என போராட்டம் நடத்தினர். கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் பதிவான வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி, விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஆணையர் விஸ்வநாதன் 2019 ஆம் ஆண்டு நவம்பர்15ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.



விசாரணைக் குழுவில் ஒரு பெண் அதிகாரி உள்பட, சிபிஐ-யில் பணிபுரிந்த இரண்டு உயரதிகாரிகளான ஈஸ்வரமூர்த்தி மற்றும் பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்திருந்தார். தனது மகள் தற்கொலை செய்திருக்கமாட்டாள் என உறுதியாக நம்புவதாக கூறிய தந்தை லத்தீப் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக டிஜிபி உள்ளிட்டவர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்புகளில் தனக்கு நம்பிக்கைஇருப்பதாக தெரிவித்திருந்தார். அதே ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில், கேரள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் லத்தீப் குடும்பத்தினர், பிரதமர் மோதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்களைச் சந்தித்து சிபிஐ விசாரணை தேவை என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.


அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அதன் பிறகு டிசம்பர் 2019ல் சிபிஐ விசாரணையை தொடங்கியிருந்தது. பல கட்ட விசாரணைகளுக்கு பிறகும், ஆய்வுகளுக்கு பிறகும் இன்று இறுதி அறிக்கையை சமர்பித்தது. அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் 'ஹோம்சிக்' காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்நிலையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள 2000 பக்க அறிக்கையில் பாத்திமாவின் குடும்பத்தினருக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளனர். அவர்களது குடும்பத்தினர் சார்பாக வழக்கு நடத்தி வரும் வழக்கறிஞர் மொஹமது ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாத்திமா லத்தீப்பின் மரணத்தை தற்கொலை என்று கூறும் சிபிஐ அறிக்கையை கடுமையாக எதிர்க்கிறோம். நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்களுக்கு பிப்ரவரி 28 ஆம் தேதி ஹியரிங் கொடுத்துள்ளது. அன்று எங்களது தீவிர எதிர்ப்பினை தெரிவித்து அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிப்போம். அந்த வார்டன் பாத்திமாவுக்கு வீட்டை விட்டு தூரமாக வந்ததன் காரணமாக உளவியல் சிக்கல்கள் இருந்ததாக கூறுவதிலேயே குறியாக இருக்கிறார்.


சிபிஐ அவருடைய கருத்தை முக்கிய விஷயமாக கருத்தில் கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் பாத்திமா எழுதிய தற்கொலை கடிதத்தில் வேறு எந்த பேராசிரியர் பெயரும் இல்லாமல் ஒருவரது பெயரை மட்டும் எழுதியிருந்ததற்கு சிபிஐ பதில் கூறவில்லை. அதற்கான பதில்களை கேட்போம்" என்று கூறியிருக்கிறார். சென்னை ஐஐடி சாதிய பாகுபாடுகளை கொண்டிருப்பதாகவும், மற்ற சாதியினர் அங்கு கொடுமைப்படுத்தப்படுவதாகவும் தொடர்ந்து பல செய்திகள் இத்தனை வருடத்தில் வந்துவிட்டன. பேராசிரியர் வசந்தா கந்தசாமி தொடங்கி விபின் வரை பலர் வேலையை விட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.