விழுப்புரம் மாவட்டத்தில் 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 688 கிராம ஊராட்சி தலைவர், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 6,097 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 2,948 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 694 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.



மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 688 ஊராட்சிகளில் அடங்கிய 5,088 கிராம ஊராட்சி வார்டுகளுக்கான ஆண் வாக்காளர்கள் 6,87,420 பேரும், பெண் வாக்காளர்கள் 6,96,115 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 158 பேரும் ஆக மொத்தம் 13,83,687 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணியில் 31 தேர்தல் நடத்து அலுவலர்களும், 904 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் ஈடுபடுவார்கள். வேட்பு மனுக்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் புதன்கிழமை 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும்.



இந்த நிலையில் திங்கட்கிழமையான இன்று 10.30 மணி முதல் 12 மணி வரை எமகண்டம் என்பதனால் 12 மணிக்கு மேல் அனைத்து வேட்பாளர்களும் தனது ஆதரவாளர்களை  கார், வேன், பஸ் இவைகளின் மூலம் அழைத்து வந்துள்ளனர். மேலும் வேட்பாளர் மற்றும் அவர்களுடன் வந்த ஆதரவாளர்கள் அனைவரும் முகக் கவசங்கள் அணியாமல் கொரோனா  நோய் தொற்று பரவலுக்கு காரணமாகவும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். மேலும் வேட்பாளரின் ஆதரவாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு உள்நுழைய முயன்றனர், இருப்பினும் மரக்காணம் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவலர்களுடன் வேட்பாளரின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக வேட்பாளருடன் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி என்ற நிலையில் வேட்பாளரின் ஆதரவாளர்கள் பலர் உடன் செல்ல முயற்சி செய்தனர். வேட்புமனுத் தாக்கல் காரணமாக மரக்காணத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு வருகிறது போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




தேர்தலுக்கான பணியை தீவிரமாக செய்து வரும் தேர்தல் ஆணையம், தேர்தல் நடவடிக்கைகள் குறித்து புகார் அளிக்க புகார் எண்களை அறிவித்தது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது கிராமங்களில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்பட்டன. அது போன்று சம்பவங்களை தடுக்கும் வண்ணம் இந்த முறை கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.